தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடரும் சோகம்! மின் கம்பத்தில் மோதி ஆண் காட்டு யானை உயிரிழப்பு! - Coimbatore Elephant Death

கோவை அருகே மின் கம்பத்தில் மோதியதில் மின்சாரம் பாய்ந்து ஆண் காட்டு யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 25, 2023, 12:13 PM IST

கோவை:கோவை அருகே மின் கம்பத்தில் மோதி ஆண் காட்டு யானை ஒன்று உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி காட்டு யானை, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக, அவ்வப்போது பயிர் சேதங்களும் உயிர் சேதங்களும் ஏற்படுவது வாடிக்கையாக நடைபெறுகிறது.

இவ்வாறு ஊருக்குள் நுழையும் யானைகளை வனத்துறையினர் கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை நேற்றிரவு ஊருக்குள் புகுந்தது.

வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த அந்த யானை, பூச்சியூர் ஹை டெக் சிட்டி பகுதியில் சுற்றி வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், பூச்சியூர் குறுவம்மா கோயில் அருகே யானை சென்ற போது பட்டா நிலத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து யானை மீது விழுந்த நிலையில், மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து வனத்துறையினர் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'காட்டு யானையை வனத்துறையினர் விரட்டிய போது, யானை மின் கம்பத்தில் மோதியதால் மின் கம்பம் உடைந்து யானை மீது விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தது' என்று தெரிவித்து உள்ளனர்.

இந்த யானை உயிரிழந்த இடம், வனப்பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலம் எனவும், மின் கம்பத்தில் யானை உடலை தேய்ததால் மின்கம்பம் யானை மீது விழுந்ததில் உயிரிழந்ததாகவும் வனத் துறையினர் விளக்கம் அளித்து உள்ளனர். மேலும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், யானைக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, சமீபத்தில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாரண்டஹள்ளி காளிக்கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டு பெண் யானை, ஆன் யானை மற்றும் இரண்டு குட்டி யானைகள் என ஐந்து யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அதேபோல, இதே மாவட்டத்தில் கம்பைநல்லூர் அருகே உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வருவது சூழலியல் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஒற்றை யானையை பிடிக்க மீண்டும் 2 கும்கிகள் வருகை: 2-வது முறையாக "ஆப்ரேசன் கருப்பு"

ABOUT THE AUTHOR

...view details