கோவை மாவட்டம், கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா. கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட இவர் மக்களின் ஆதரவோடு வெற்றியும் பெற்றார். ஆனால், தொடர்ச்சியாக இவரை பணி செய்யவிடாமல் சிலர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை சரிதா அளித்துள்ளார்.
அந்த புகாரில், தான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உட்கார விடாமல் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். ஊராட்சி எல்லையிலுள்ள தகவல் பலகை, ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் "ஊராட்சி தலைவர் சரிதா" என தனது பெயரை எழுதவிடாமல் தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊராட்சி மன்ற நாற்காலியில் உட்கார்ந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக சரிதா தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து பொள்ளாச்சி டிஎஸ்பி கே.ஜி.சிவக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.