கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிர்வாகிகளிடையே பேசினார். அப்போது பேசிய அவர், “சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக ஒரு சின்னப்பிள்ளையை அடியோ அடி என அடிக்கிறார்கள்.
அது அவரது தாத்தாவிற்கு தாத்தா சொன்ன விஷயம். எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர், பெரியார். சாமி இல்லை என சொல்வது பெரியாரின் வேலை அல்ல. சமுதாயத்திற்காக கடைசி வரை வாழ்ந்தவர், பெரியார். திமுகவோ, வேறு எந்த கட்சியும் பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது. பெரியாரை தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும். சமீப காலங்களில் நடப்பதை மத்திய அரசு மதிப்பதில்லை.
நாடாளுமன்றத் தேர்தலை மத்திய அரசு சீக்கிரம் கொண்டு வருவார்கள். கடந்த தேர்தலில் ஜெயித்திருந்தால் எம்எல்ஏ. இல்லையென்ற போதும் நெஞ்சை நிமிர்த்தி நடந்தேன். என் முகத்தில் அப்போது சோகம் இல்லை. அத்தனை மக்கள் வாக்களித்தும் நம்மை ஏமாற்றியது யார்? மீண்டும் நாம் சூழ்ச்சிக்கு ஆளாகக் கூடாது. மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரை எனக்கு வெவ்வேறு இடங்களில் இருந்து அழைப்பு வருகிறது. தேர்தலில் நிற்க கோவைக்கு வாருங்கள். நாம் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என தொண்டர்கள் சொல்கிறார்கள். சென்னைக்கு வாருங்கள் என அழைக்கிறார்கள்.
இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்புதான் கேட்க வேண்டும். கருணாநிதி என்னை திமுகவிற்கு வருமாறு அழைத்தார். அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போகிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்பா காங்கிரசில் இருப்பதால் காங்கிரசில் சேர்கிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்போதே அரசியலில் இறங்கி இருக்க வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் 20 பேர் என் அப்பா போல இருக்க வேண்டும். தேர்தலில் நீங்கள் வேலை செய்ய வேண்டும்.
கோவையில் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மொத்தமாக அனைத்து பூத்திலும் வேலை செய்ய 40 ஆயிரம் பேர் வேண்டும். கோவைக்கு வாங்க என கூப்பிடுவது மட்டும் போதாது. வேலை செய்ய 40 ஆயிரம் பேரை தயார் செய்ய வேண்டும். விக்ரமுக்கு கூட்டம் சேர்ந்தது. மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் சேரவில்லை என்று சொல்வதை நம்ப முடியுமா? உங்களால் இயன்றதை செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன். தலைவனால் இயலாததை தொண்டனிடம் சொல்லக் கூடாது. எனக்கு மூக்கு உடைத்தாலும் பரவாயில்லை. மருந்து போட்டு வந்து, மீண்டும் கோவையில் நிற்பேன். உண்மை தோற்றிருக்கக் கூடாது என திமுக நிர்வாகி ஒருவர் சொன்னார்.