கோயம்புத்தூர்: கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் மாலில் உள்ள திரையரங்கில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக, படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் வந்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய நடிகர் எஸ்.ஜே. சூர்யா, "படத்தின் வெற்றி பயங்கரமான சந்தோசத்தை தந்துள்ளது. இப்படத்தை பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் குறிஞ்சி மலர் எனப் பாராட்டியுள்ளார். அந்த வார்த்தை இது ஒரு அரிய படைப்பு என்பதை காட்டும் வகையில் இருந்தது.
கார்த்திக் சுப்புராஜ் ஒரு அரிய படைப்பாளர். இது அவருடைய கேரியர் பெஸ்ட் படம். இதை மக்கள் கொண்டாடுவதைப் பார்க்க சந்தோஷமாக உள்ளது. 'இறைவி' படம்தான் எனக்கு முதல் முறையாக நடிப்பிற்கான பாதையைப் போட்டுத் தந்தது. அதன் பின்னர்தான் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது.
இந்தப் படத்திற்கு பிறகும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். ரஜினிகாந்திடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டை, எனது பிறவியில் கிடைத்த பெரிய பாராட்டாகப் பார்க்கிறேன். அடுத்து தனி ஹீரோ பாதையில் செல்ல உள்ளேன். டைரக்டர் ஆனதே, நடிகராக வேண்டும் என்பதற்காகத்தான். தற்போதைய நிலைக்கு என்னை நானே இயக்க வேண்டும்" என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது ரொம்ப சந்தோஷம். இந்தப் படம் வருவதற்கு முன்பு எனக்கு பதற்றம் இருந்தது. தற்போது கிடைக்கும் வரவேற்பு எனக்கு உற்சாகம் அளிக்கிறது. ஜிகர்தண்டா முதல் பாகம் பலருக்கு பிடித்த படமாக இருந்தது. அதைவிடச் சிறந்த படம் தர வேண்டும் என நினைத்தேன்.