ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த துக்கநாக்கயன் பாளையத்தைச் சேர்ந்தவர் தேவகுமார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். நண்பர்களான இவர்கள், கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு (நவ.2) இருவரும் சோமனூர் சென்றுவிட்டு அன்னூர் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர்.
வரும் வழியில் பெய்த கனமழை காரணமாக சோமனூரில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் இருசக்கர வாகனத்தோடு வழிதவறி இருவரும் விழுந்தனர். இரவு நேரம் என்பதால் கொட்டும் மழையோடு குளம்போல் தேங்கி கிடந்த தண்ணீரில் காலை வரை தத்தளித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை அவ்வழியாக நடைபாதைக்குச் சென்ற மக்கள், தேவகுமார் மட்டும் தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு உடனடியாக மீட்டனர்.
சகதியுடன் மீட்கப்பட்ட தேவகுமார் தனது நண்பர் தமிழ்ச்செல்வன் குழிக்குள் கிடப்பதாக அங்கிருந்த மக்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் தண்ணீரில் இறங்கி தமிழ்ச்செல்வனை தேடினர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால், உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.