கோயம்புத்தூர்: அதிமுக கோவை மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிற்கு இணங்க தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் தொழிலாளர்களுக்குக் கைக்கடிகாரம் வழங்கப்படுகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 2500 தொழிலாளர்களுக்குக் கைக்கடிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக தான்.
கோவையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட உயிரியல் பூங்காக்களில் இருந்த உயிரினங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நான் அமைச்சராக இருந்த பொழுது இந்த உயிரியல் பூங்காவை விரிவு படுத்தி மைசூர் உயிரியல் பூங்காவை விட பெரியதாக உருவாக்கத் திட்டமிட்டு இருந்தேன்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் திமுக புதிய திட்டங்கள் தராவிட்டாலும் பரவாயில்லை ஆனால் இருக்கின்ற திட்டங்களுக்கு மூடு விழா செய்கிறார்கள். கோவை மக்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு உயிரியல் பூங்கா தான். அது புறநகர்ப் பகுதியான எட்டிமடை பகுதியில் ஒரு உயிரியல் பூங்கா அமைக்க சூழல் இருந்த போதும் அதை வேண்டாம் என்று மாநகருக்கு உள்ளேயே அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.