கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26) என்ற இளைஞர், சுரேகா என்ற திருநங்கையை காதலித்து 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். கவுண்டம்பாளையம் பிரிவுப் பகுதியில் உள்ள ஸ்ரீ பரஞ்சோதி மாரியம்மன் கோயிலில் அவர்களின் திருமணம் நடந்துள்ளது. இருவரும் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தற்போது வசித்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த ஜனவரி 21ஆம் தேதி இந்து திருமணச் சட்டத்தின்படி, தங்களது திருமணத்தைப் பதிவு செய்யக்கோரி, இந்தத் தம்பதியினர் வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் இணையம் மூலம் விண்ணப்பித்தனர். மணமகள் தொடர்பாக அச்சட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர் குறித்தான வகைப்பாடு இடம் பெறாததால் திருமணத்தைப் பதிவு செய்ய சார் பதிவாளர் மறுத்துள்ளார்.
மேலும் மணிகண்டனின் பிறப்பு தேதி சான்றிதழ்களில் தேதி மாறி இருப்பதாகவும், இதுதொடர்பாக மேல் முறையீடு செய்யலாம் எனவும் சார் பதிவாளர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகததில் உள்ள மாவட்ட பதிவாளரிடம் மணிகண்டன் - சுரேகா தம்பதியினர் மேல் முறையீடு மனு அளித்தனர்.