தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் முதன்முறையாக திருநங்கையின் திருமணம் பதிவு - திருநங்கை திருமணம் பதிவு

கோவை: குனியமுத்தூரைச் சேர்ந்த இளைஞருக்கும், திருநங்கைக்கும் நடைபெற்ற திருமணம் பதிவு செய்யப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டில் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்ட மாற்றுப் பாலின திருமணம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

திருநங்கையின் திருமணம் பதிவு, First transgender marriage
திருநங்கையின் திருமணம் பதிவு, First transgender marriage

By

Published : Feb 14, 2020, 9:20 PM IST

கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26) என்ற இளைஞர், சுரேகா என்ற திருநங்கையை காதலித்து 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். கவுண்டம்பாளையம் பிரிவுப் பகுதியில் உள்ள ஸ்ரீ பரஞ்சோதி மாரியம்மன் கோயிலில் அவர்களின் திருமணம் நடந்துள்ளது. இருவரும் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தற்போது வசித்து வருகின்றனர்.

சான்றிதழுடன் மணிகண்டன் - சுரேகா

இதனிடையே கடந்த ஜனவரி 21ஆம் தேதி இந்து திருமணச் சட்டத்தின்படி, தங்களது திருமணத்தைப் பதிவு செய்யக்கோரி, இந்தத் தம்பதியினர் வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் இணையம் மூலம் விண்ணப்பித்தனர். மணமகள் தொடர்பாக அச்சட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர் குறித்தான வகைப்பாடு இடம் பெறாததால் திருமணத்தைப் பதிவு செய்ய சார் பதிவாளர் மறுத்துள்ளார்.

திருநங்கையின் திருமண பதிவுச் சான்று

மேலும் மணிகண்டனின் பிறப்பு தேதி சான்றிதழ்களில் தேதி மாறி இருப்பதாகவும், இதுதொடர்பாக மேல் முறையீடு செய்யலாம் எனவும் சார் பதிவாளர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகததில் உள்ள மாவட்ட பதிவாளரிடம் மணிகண்டன் - சுரேகா தம்பதியினர் மேல் முறையீடு மனு அளித்தனர்.

இதுதொடர்பாக மாநில பதிவுத்துறை தலைவர், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெற்றனர். அப்போது இந்து திருமணச் சட்டத்தில் மூன்றாம் பாலினத்தனவரை, மணமகன் அல்லது மணமகள் என்ற வகைப்பாட்டின் கீழ் சேர்த்துக் கொள்ள அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதிவாளரிடம் சான்றிதழைப் பெறும் மணிகண்டன் - சுரேகா தம்பதி

அதன்படி திருமணப் பதிவு செய்யவும், மணிகண்டனின் பிறப்பு சான்றிதழ் தேதிப்படி பதிவு செய்யவும் வடவள்ளி சார் பதிவாளருக்கு கோவை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் மணிகண்டன் - சுரேகா தம்பதியினர் திருமணத்தைப் பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் திருநங்கை - இளைஞர் தம்பதியினரின் திருமணம் பதிவு செய்யப்பட்டது, இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் 2020: மூலதன செலவுக்காக சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details