கோயம்புத்தூர்: நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்தவர், பிரவீன் தியாகராஜன். இவர் காருண்யா பல்கலைக்கழகத்தில் பி.காம் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இவர், தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இளையோருக்கான கிரிக்கெட் அணியின் (19 வயதிற்கு கீழ்) கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பிரவீன் கூறுகையில், “நீலகிரி மாவட்டம் உதகையில் எனது பள்ளி படிப்பை நிறைவு செய்தேன். பள்ளியில் படிக்கும்போதே கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இருந்தது. என்னுடன் விளையாடியவர்கள் என்னை ஊக்கப்படுத்தியதால்தான் தற்போது கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
அனைவரும் முயற்சி செய்தால் கிரிக்கெட்டில் சாதிக்கலாம். கனவை நோக்கி பயணப்பட்டால் வெற்றி எளிது. எனக்கு தோனி தான் வழி காட்டி. பல்வேறு தோல்விகளை தழுவித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். சென்னை, ஹைதராபாத், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விளையாடியுள்ளேன். தேசிய அளவில் சாதிப்பேன்.