கோயம்புத்தூர்:தமிழகம் முழுவதும் யானைகளின் வாழ்விடங்கள் அழிப்பால் யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றது. மேலும் வனப்பகுதியில் யானைகளுக்கான உணவு பற்றாக்குறையாலும் உணவு தேடி யாணைகள் அதிகளவில் வனத்தை விட்டு ஊருக்குள் வருகின்றன. இதனால் வனவிலங்கு - மனிதர்கள் மோதல் அதிகம் நடைபெறுகிறது.
உணவிற்காக விவசாய நிலங்களை நோக்கி படையெடுக்கும் யானைகளின் உயிரை அங்கு விதிகளை மீறி வைக்கப்பட்டு இருக்கும் மின் வேலிகள் காவு வாங்கி விடுகின்றன. மேலும் ஊருக்குள் வரும் யானைகள் பொதுமக்களை தாக்குவதால் பொதுமக்கள் மத்தியிலும் உயிரிழப்புகள் அதகளவில் நடந்துள்ளன.
முன்பெல்லாம் வலசை போகும் யானைகள் ரயில்களில் அடிபட்டு அதிகளவில் உயிரிழந்து வந்தன. தற்போது உணவு தேடி யானைகள் ஊருக்குள் வந்து உயிரிழக்கும் நிலை அதிகளவில் நடந்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைப்பதற்கும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் பெண் யானை ஒன்று உயிரிழந்து உள்ளது வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், மருதமலை, ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது.
குறிப்பாக மருதமலை, அனுவாவி சுப்ரமணியர் கோவிலில் பக்தர்கள் வழித்தடத்தில் யானைகள் வருவதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினரும் இயன்ற வரை யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.