கோயம்புத்தூர்: திமுக ஆதிதிராவிடர் மாநில இணைச் செயலாளராக இருப்பவர், திப்பம்பட்டி ஆறுச்சாமி. இவர் மாவட்ட வேளாண்மை உற்பத்திக் குழுவில் உறுப்பினராக இருந்த நிலையில், தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட வேளாண் உற்பத்தி குழுவில் இவர் பெயர் இடம் பெறவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் இது குறித்து அவர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கேட்டபொழுது, பழைய நிர்வாகிகளுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்ததாகவும், ஆனால் அதில் பரமசிவம் என்பவருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேநேரம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வேறு யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது இவரும், இவரது ஆதரவாளர்களும் இச்செயலுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்தான் காரணம் எனக் கூறி, கண்டனம் தெரிவித்து, முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முழக்கங்களை எழுப்பக் கூடாது என்றனர்.
இது குறித்து ஆறுச்சாமி கூறுகையில், “நான் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சார்ந்தவன். தற்போது வேளாண்மை உற்பத்திக் குழுவில் புதியதாக பொறுப்பு போடப்பட்டுள்ளது என்பது சாதி ரீதியான தாக்குதல். நான் 1977-இல் இருந்து திமுகவில் உறுப்பினராக இருந்து, தற்போது ஆதிதிராவிடர் மாநில இணைச் செயலாளராக இருக்கிறேன்.