தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 21, 2023, 6:01 PM IST

ETV Bharat / state

"செந்தில் பாலாஜி நல்லா இருக்கனும்" - மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யக்கோரி கோவையில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, எடப்பாடி பழனிசாமி, தங்கமணி மற்றும் தன் மீது திமுக அரசு புதிய வழக்குகளை தொடர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோயம்புத்தூர்:செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரியும், திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சராக இருந்து தற்போது இலாக்கா இல்லாத அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜியை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டம், சாலை பணிகள், மேம்பால பணிகள் எல்லாம் முடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய முப்பதாயிரம் கோடி ஊழல் குறித்து விசாரணை நடத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அது மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், கேரளாவில் அணை கட்டி வரும் கேரள அரசை தடுக்காமல் உள்ள திமுக அரசை கண்டித்தும், கனிம வளங்கள் கடத்தலை தடுத்து நிறுத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.பி. வேலுமணி, "அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் தற்போதைய முதல்வர் திறந்து வைத்து வருகிறார். இந்த ஆட்சி உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும். 7.5% இட ஒதுக்கீடு கொடுத்து மருத்துவ மாணவர்கள் 600 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவராக வாய்ப்பு தந்த எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் முடிவு செய்துவிட்டார்கள்.

உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது. இதனை உடனடியாக மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என கூறுகிறது. முதலமைச்சரின் குடும்பம் அனைவரும் செந்தில் பாலாஜி இருக்கும் மருத்துவமனையில் தான் உள்ளார்கள். அவர் ஏதேனும் கூறி விடுவாரோ என்ற பயத்தில் தான் அனைவரும் அங்கு சென்று கொண்டிருக்கிறார்கள்”, என விமர்சித்து உள்ளார்.

மேலும் அவர்,“மு.க.ஸ்டாலினுக்கு முக்கியமான எதிரி நான் தான். ஸ்டாலினை குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தேன். கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் நாங்கள் வென்றோம். அதெல்லாம் பொறுக்க முடியாமல் பழிவாங்கும் நடவடிக்கையாக மூன்று முறை எனது வீட்டில் சோதனையை நடத்தி தொந்தரவு செய்தார்கள். பிறகு ஒன்றும் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார்கள்.

டேவிட்சன் தேவாசீர்வாதம், உதயசந்திரன் தான் இந்த ஆட்சியை நடத்துகிறார்கள். ஆட்சியின் மீது மிகப்பெரிய கெட்ட பெயர் உள்ளது. அதை திசை திருப்ப முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். முதலமைச்சர் நாட்டில் என்ன நடக்கிறது என கவனிப்பதில்லை. அனைத்து துறைகளிலும் கடுமையான ஊழல் நடக்கிறது. கோடநாடு பிரச்சினையை வெளியில் கொண்டு வந்து நடவடிக்கை எடுத்ததே எடப்பாடியார் தான்”, என்றும் கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், "என் மீதும், தங்கமணி, விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீதும் புதிய வழக்கு போட திட்டமிட்டு உள்ளனர். என்னை பொருத்தவரை தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜி நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் அவர் செய்த தவறுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு உடல்நிலை நன்றாக உள்ளதா, இல்லையா என்பது எனக்கு தெரியாது மருத்துவர்களுக்கு தான் தெரியும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரும் பொழுது இன்று காலை அறுவை சிகிச்சை என உள்ளே அழைத்துச் சென்று விட்டார்கள். இதில் என்ன நடக்கும் என்று நாட்டு மக்கள் பார்த்து வருகிறார்கள். நன்றாக இருக்கக்கூடிய ஒரு மனிதரை இவ்வாறு செய்கிறார்களே என்ற வருத்தத்தில் மக்கள் உள்ளார்கள்”, எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மீதான ED-யின் மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

ABOUT THE AUTHOR

...view details