தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதவி செய்வதாகக் கூறி வேறு கணக்கில் டெபாசிட் செய்த பலே திருடன்! - கோயம்புத்தூர் செய்தி

கோயம்புத்தூர்: துடியலூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் உதவி செய்வதாகக் கூறு வேறு கணக்கில் டெபாசிட் செய்த அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ATM theft
ATM theft

By

Published : Oct 23, 2020, 12:49 PM IST

கோயம்புத்தூர் துடியலூரில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் தனது ஏடிஎம் கார்டு மூலம் ரூ. 21,500ஐ டெபாசிட் செய்ய வந்துள்ளார். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தின் கீபேட் சரியாக வேலை செய்யாததை கவனித்த அருகில் இருந்த அடையாளம் தெரியாத நபர், தான் டெபாசிட் செய்து தருவதாக கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் சந்திரமோகனின் கவனத்தை திசை திருப்பி கண் இமைக்கும் நேரத்தில் பணத்தை வேறு கணக்கில் டெபாசிட் செய்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். பணம் டெபாசிட் செய்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும் குறுந்தகவல் வராததால் சந்தேகமடைந்த சந்திரமோகன், ஏடிஎம் இயந்திரத்தில் இருப்பை சரிபார்த்தபோது, அவரது வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின், அடையாளம் தெரியாத நபரால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அருகில் இருந்த எஸ்பிஐ வங்கிக்கு சென்ற சந்திரமோகன், நடந்தவற்றை கூறி சிசிடிவி காட்சியை பார்த்து அந்த நபர் டெபாசிட் செய்த வங்கிக் கணக்கை முடக்குமாறு கூறினார். ஆனால், வங்கி அலுவலர்கள் அந்த கணக்கை முடக்குவதற்குள் அதிலிருந்து பணம் எடுக்கப்பட்டதால், துடியலூர் காவல்நிலையத்தில் சந்திரமோகன் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம், உதவி ஆய்வாளர் தாமோதரன், வங்கிக் கணக்கில் இருந்த முகவரியை வைத்து கோவை ஒண்டிபுதூர் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த நபரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், சிசிடிவில் பதிவாகியிருந்த நபரின் உருவத்திற்கும் இவருக்கும் வித்தியாசம் இருந்துள்ளது. இதனிடையே அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபரின் ஏடிஎம் கார்டு ஒரு மாதத்துக்கு முன்பே தொலைந்து போனதும், அதை திருடியவர் அந்த கார்டை பயன்படுத்தி ஏற்கனவே காரமடை பகுதியில் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனால் தனது கார்டை யாரோ தவறாக பயன்படுத்துவதை அறிந்து அதை முடக்குவதற்காக ஒண்டிபுதூரைச் சேர்ந்த நபர் வங்கிக்கு சென்றபோது, அவரது வங்கிக் கணக்கில் ரூ. 21, 500 டெபாசிட் ஆனதாக குறுந்தகவல் வந்துள்ளது. அதை அடையாளம் தெரியாத நபர் எடுப்பதற்கு முன்பாக காசோலை மூலம் உடனடியாக பணத்தை காவல்துறையினர் எடுத்து சந்திரமோகனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சிசிடிவில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details