கோவை:தமிழக பாஜகவின் தொழிற்பிரிவு துணைத் தலைவராக இருந்து வருபவர் செல்வகுமார். இவர் கோவை காளப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவர் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு பரப்பும் வகையில் பதிவுகளை பதிவிட்டதாக கூறி, கோவை கணபதிபுதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பாஜக மாநில தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமாரை சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று(ஏப்.12) காலை கைது செய்தனர். செல்வகுமார் மீது, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் பதிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.