தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் தொடரும் சந்தன மரத் திருட்டு - திணறும் காவல் துறை!

கோவை: கடந்த சில மாதங்களாக சந்தன மரங்களைக் குறிவைத்து வெட்டிக் கடத்தும், கடத்தல் கும்பலைப் பிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.

By

Published : Dec 13, 2019, 5:37 PM IST

sandalwood
sandalwood

கோவை மாவட்டம், மருதமலை வனப்பகுதியில் விலைமதிப்பற்ற ஏராளமான தாவர மற்றும் மர வகைகள் உள்ளன. குறிப்பாக அடிவாரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தேக்கு, சந்தனம் உள்ளிட்ட அதிக விலை மதிப்புள்ள மரங்கள் வனத்துறை சார்பில் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருதமலை அடிவாரத்தில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான வன குடியிருப்பு வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் இருபது வயது உடைய மூன்று சந்தன மரங்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கடத்தப்பட்டு உள்ளன. இது குறித்து வன ஊழியர்கள், உடனடியாக உயர் அலுவலர்களுக்கும் வடவள்ளி காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் வன ஊழியர்கள் எப்போதும் தங்கியிருப்பர். இரவு நேரத்தில் மட்டும் அவர்கள் யானைகளை விரட்ட காட்டுக்குள் செல்கின்றனர்.

இதனையறிந்த, நபர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதேபோல யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கடத்தல்காரர்கள் வெளியேறி இருப்பதால், அவர்கள் உள்ளூர் ஆட்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர்கள் இந்த சந்தன மரங்களை குறி வைத்து வெட்டி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக, ஆர்.எஸ்.புரம், சாய் பாபா காலனி, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன.

இதேபோல் இரண்டு வாரங்களுக்கு முன்பு சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் பகுதியில் 15 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் உலா வந்தனர். பின்னர் அருகிலிருந்த தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் புகுந்து, அங்கு மது அருந்திவிட்டு சந்தன மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல முயன்றனர். மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு கோவைப்புதூர் பகுதிகளில் ஒரு வீட்டில் சந்தன மரத்தை வெட்டியுள்ளனர். ஆனால், ஆட்கள் திரண்டதால் வெட்டிய மரத்தை அங்கேயே போட்டுச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

தொடரும் சந்தன மரத் திருட்டு

சந்தன மரக்கடத்தல் சம்பவங்களைத் தடுக்க, கோவை மாநகர பகுதியில் காவல் துறையின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கெடுபிடிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து சந்தனக் கடத்தல் கும்பல்களின் நடமாட்டம் புறநகர்ப் பகுதிகளை நோக்கி திரும்பியுள்ளது. காவல் துறையினர் இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அடையாள தெரியாத நபர்கள் சந்தன மரங்களை வெட்டி எடுத்துச் செல்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பயங்கர ஆயுதங்களுடன் உலாவரும் சந்தனமர கடத்தல் கும்பல்: சிசிடிவி காட்சி வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details