கோயம்புத்தூர்: சுந்தராபுரம் பகுதி காந்தி நகரைச் சேர்ந்தவர் தயானந்த். இவர் ஒன்றிய அரசால் வழங்கப்படும் ஐசிடி விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப செயல்பாட்டிற்கு ஆசிரியர்களுக்காக ஐசிடி (Information and Communication Technology) விருது வழங்கப்படுகிறது. 2018, 2019 ஆம் ஆண்டு வழங்கப்படும் விருதுக்கு தமிழ்நாட்டில் ஆறு பேர் தேர்வாகியுள்ளனர்.
அதில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியரான கோவையைச் சேர்ந்த தயானந்த் ஒருவர். இவருக்கு 2018ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்படவுள்ளது.
அனிமேஷன் முறையில் பாடங்கள்:
இவர் 2D, 3D அனிமேஷன் முறையில் பாடங்களை நடத்திவருகிறார். 2012ஆம் ஆண்டு ஆசிரியர் வாழ்க்கையை தொடங்கிய இவர் 2017ஆம் ஆண்டிலிருந்து உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுகிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது தொடக்கப் பள்ளி (primary school team) புத்தக வடிவமைப்புக் குழுவில் இருந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கியூ ஆர் ஸ்கேன் குழுவில் (QR scan team) பணியாற்ற தொடங்கினார். 40 பேர் உள்ள குழுவில் தனிப்பட்ட நபராக 170க்கும் மேற்பட்ட அனிமேஷன் கதைகளை வடிவமைத்துள்ளார்.
இவர்கள் வடிவமைக்கும் இந்த வீடியோக்களை diksha.gov.in என்ற ஒன்றிய அரசின் அங்கீகாரம் பெற்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அனைத்து மாநிலங்களும் பங்குபெறும் இந்த தளத்தில் அதிகப்படியான வீடியோக்களை பதிவு செய்ததற்காக ஒன்றிய அரசு இவருக்கு இந்த விருதை அறிவித்துள்ளது.