கோவை:தற்காப்பு பயிற்சிகள் என்பது ஒரு நபரின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் உக்கப்படுத்துவது மட்டும் அல்ல, சமூகத்தில் ஏற்படும் ஒரு சில ஆபத்துகளில் இருந்து தன்னைத்தானே பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையாகும். தற்காப்புக் கலையைக் கற்பது பல நாடுகளில் கட்டாயமாக உள்ளது.
பெரும்பாலான தற்காப்புக் கலைகள் ஆயுதமற்ற தற்காப்புக் கலைகளின் வடிவத்திலேயே கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக மாணவர்களாக இருக்கும் போது இந்த தற்காப்புக் கலையைக் கற்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது என தற்காப்புக் கலை வல்லுநர்கள் பலரும் கூறுகின்றனர்.
மேலும், இத்தகைய தற்காப்புக் கலைப் பயிற்சிகள் ஒரு நபரின் உடலை மட்டும் வலிமைப்படுத்தும் பயிற்சியாக இல்லாமல், மன நலத்திற்கும் மிகவும் இன்றியமையாததாக அமைகிறது. குறிப்பாக, பள்ளி குழந்தைகள் சிறு வயது முதல் தற்காப்புக் கலைப் பயிற்சியில் ஈடுபடும் போது கடின உழைப்பு, நேரம் தவறாமை, இக்கட்டான சூழ்நிலையிலும் சரியான முடிவெடுப்பது போன்ற பண்புகளை பெறுகின்றனர்.
அந்த வகையில், கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. மாவட்ட காவல்துறையினர் அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.