கோயம்புத்தூர்: மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில் 1,000 -க்கும் மேற்பட்டோர் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெண்கள் விடுதியில் கடந்த ஒரு மாத காலமாக நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் அரைநிர்வாணமாக உள்ளே புகுந்து திருடுவதாகவும், மிரட்டுவதாகவும் மாணவிகள் குற்றஞ்சாட்டி பல்கலைக்கழக வளாகத்தில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தை தொடர்ந்ததால் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் மாணவிகள் போராட்டம் நடத்தி வரும் இடத்திற்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
எனினும் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தங்களுக்கு எழுத்துப்பூர்வமாக பாதுகாப்பு குறித்து எழுதி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.