தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலாசாரத்தை பறைசாற்றும் 'ஒயிலாட்டம்' - முன்னெடுக்கும் ஆசிரியர்

கோவை: தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், காவடியாட்டம், வள்ளி கும்மி, பறை ஆகியவற்றை கற்றுக்கொள்வதில் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஊர் ஊராகச் சென்று தமிழர் கலைகளை இலவசமாக கற்றுக்கொடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் குறித்த செய்தி தொகுப்பு.

oyilattam

By

Published : Aug 8, 2019, 6:15 PM IST

Updated : Aug 8, 2019, 7:01 PM IST

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களில் இளைய தலைமுறையினருக்கு கிராமியக் கலைகளை ஊக்குவிக்க அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் கனகராஜ் 'சங்கமம்' என்ற பெயரில் கலைக் குழுவை நடத்திவருகிறார்.

இவர் அப்பகுதியில் உள்ள கிராமங்களை தேர்வுசெய்து அக்கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு ஒயிலாட்ட கலையை சிறப்பாக கற்பித்து மேடைகளிலும் அரங்கேற்றிவருகிறார்.

ஒயிலாட்டம் ஆடும் ஆண்கள் மற்றும் பெண்கள்

இதன் ஒரு பகுதியாக 21ஆவது அரங்கேற்றமாக கணியூர் அருகே உள்ள சந்தோஷ் நகர் பகுதியில் ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் வண்ண உடைகளை உடுத்தி ஒயிலாட்டம் ஆடி மக்களை மகிழ்வித்தனர்.

இசைக்கு ஏற்ற பாடலுடன் நடனமாடி மூன்று மணி நேரம் பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். கலாசாரத்தை பறைசாற்றும் இந்த ஒயிலாட்டத்தை தற்போது கொங்கு மண்டல மக்கள் ஆர்வமுடன் கற்றுவருகின்றனர்.

ஒயிலாட்டம் ஆண்கள் ஆடும் ஆட்டம். ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம். இந்நிலையில் ஒயிலாட்டத்தின் வரலாற்றை தெரிந்துகொள்வதைவிட இதனை அனைவரும் கற்க வேண்டும் என்ற முனைப்புடன் தலைமை ஆசிரியர் கனகராஜ் பல முயற்சிகளை செய்துவருகிறார். பணி முடிந்து வீட்டில் ஓய்வு எடுக்கவேண்டும் என நினைப்பவர்கள் மத்தியில் இவரது செயல் பலருக்கும் முன்மாதிரியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒயிலாட்டக் கலையை உலக அரங்கில் அரங்கேற்ற வேண்டும் என்பதே இவரது எதிர்கால கனவாக இருந்துவருகிறது. இதுகுறித்து கனகராஜ் பல சுவாரஸ்யமான பதில்களையும் அளித்துள்ளார்

ஒயிலாட்டக் கலையின் எதிர்காலம் என்ன?

ஒயிலாட்டம் கற்க வருபவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் இந்தக் கலையைக் கற்கவருவது மனதிற்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கடல் தாண்டி தமிழர் கலையை இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் பரப்பிவருகிறோம். விரைவில் ஒயிலாட்டம் பயின்ற கலைஞர்களை சுமார் 2000 பேரை கொண்டு ஒரே இடத்தில் அரங்கேற்றம் செய்து கின்னஸ் சாதனை படைப்போம்.

ஒயிலாட்டக் கலையின் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகள் அழிந்துவருகின்றன. அதனை இன்றைய தலைமுறையினருடன் இணைந்து மீட்டெடுப்பதே வாழ்நாள் சாதனைதான். நிச்சயம் லட்சியத்தை நிறைவேற்றுவோம். அழிந்து வரும் தமிழர் கலைகளை காக்க எங்களது முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று கூறி முடித்தார்.

தலைமை ஆசிரியர் கனகராஜ் கிராம மக்களின் மத்தியில் கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் மூலம் கோவை மாவட்டத்தில் கிராமிய கலைகள் கொண்ட கிராமங்கள் அதிகளவில் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

Last Updated : Aug 8, 2019, 7:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details