தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 4, 2019, 11:55 AM IST

ETV Bharat / state

அனுமதி இல்லாமல் இயங்கும் செங்கல் சூளைகள் - டன் கணக்கில் செம்மண் கொள்ளை!

கோவை: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் இயங்கும் செங்கல் சூளைகளுக்கு சட்டவிரோதமாக டன் கணக்கில் செம்மண் கடத்தப்படுவதால் விவசாய பாதிப்பு, வன விலங்கு-மனித மோதல்கள் உள்ளிட்டவை அரங்கேறுவதாக புகார் எழுந்துள்ளது.

red-sand

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 204 செங்கல் சூளைகள் இயங்கிவருகின்றன. செங்கல் சூளைகளுக்கான செம்மண் அங்குள்ள சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து தோண்டி எடுத்து பயன்படுத்திவருகின்றனர். சின்னதடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் விதிமுறைகளை மீறி செம்மண் எடுக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது. விளைநிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் மட்டுமின்றி நீர்நிலைகளையும் விட்டுவைக்காமல் மண்வளம் தொடர்ந்து சுரண்டப்பட்டுவருகிறது.

செம்மண் குவாரி

கனிமவள விதிப்படி அனுமதி பெற்ற அரசு நிலங்களாக இருந்தாலும், தனியார் நிலங்களாக இருந்தாலும் மூன்று அடி ஆழம்வரை மட்டுமே மண் எடுக்க வேண்டும், கனரக வாகனங்களை பயன்படுத்தக் கூடாது, அருகாமையிலிருக்கும் நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போதிய இடைவெளியில் மண் எடுக்க வேண்டும், குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுமே மண் எடுக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் புதைக்கப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்கிறது.

நிலங்கள் இருந்த இடங்கள் மிகப்பெரிய பள்ளங்களாக மாறிவருவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, விவசாயம் செய்வதற்கான சூழல் இல்லாமல் போயுள்ளது. நிலம் மற்றும் நீர்வளம் மிகுந்த பகுதியில் 20 அடி முதல் 150 அடி வரை தோண்டி செம்மண் எடுக்கப்படுவதால், ஊர் முழுக்க பள்ளங்களாகவும், குழிகளாகவும் மாறியுள்ளதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தக் கனிமவள கொள்ளைக்கு அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், இதுதொடர்பாக புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

செங்கல் சூளை

இந்நிலையில் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், கோவை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தடாகம் சுற்றுவட்டாரப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அரசு அனுமதியின்றி செயல்பட்டுவருவதாகவும், இந்தச் சூளைகளுக்கு வனத்தை ஒட்டி சுமார் மூன்று முதல் எட்டு மீட்டர் ஆழத்திற்கு குழிகள் தோண்டி செம்மண் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தத் தடாக பள்ளத்தாக்கை சுற்றி அமைந்துள்ள காப்புக்காடு அதிக சரிவுப்பகுதிகளாகவும், சரிவு பகுதி முடிந்தவுடன் பட்டா, வருவாய் நிலங்களாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்டா நிலங்களில் சூளைகள் அமைத்து ஆழமான குழி தோண்டி செம்மண் எடுக்கப்பட்டுவருவதால் வனப்பகுதியில் ஓர் இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு செல்லும் யானைகள் சரிவுப்பகுதியில் செல்ல முடியாத காரணத்தால் வழிமாறி ஊருக்குள் செல்வதாகவும், இக்குழிகளுக்குள் யானைகள் தவறி விழுந்து காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து யானை - மனித மோதல்கள் ஏற்பட்டு பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் சேதம் ஏற்படுத்திவருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் தடாகம் பள்ளத்தாக்கு பகுதிகளில் அரசு அனுமதியின்றி செயல்பட்டுவரும் செங்கல் சூளைகள், அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிகமான ஆழத்திற்கு செம்மண் எடுக்கும் செங்கல் சூளைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பரிந்துரை செய்துள்ளார்.

செம்மண் குவாரி

முன்னதாக, 2015ஆம் ஆண்டும் மாவட்ட வன அலுவலர், மாவட்ட ஆட்சியருக்கு இதேபோல ஒரு கடிதம் எழுதியிருந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, செங்கல் சூளைகள் எதுவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறவில்லை எனவும், இரும்பு செட் அமைத்து இயங்கும் சூளைகளுக்கு மின் இணைப்புகள் வழங்கவில்லை எனவும் மின்சார வாரியம் பதிலளித்திருந்தது.

இது தொடர்பாக, சின்னதடாகம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு அறிக்கை அனுப்புமாறு கோவை வடக்கு வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

செம்மண் கொள்ளை, கனிமவள கொள்ளையை தடுக்க சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை
வனத்துறை கடிதம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், வனத்துறை அரசின் கீழ் இயங்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அனுமதியில்லாமல் இயங்கும் செங்கல் சூளைகளாலும், விதிமுறைகளை மீறி மண் எடுக்கப்படுவதாலும் மனிதர்களுக்கும், வனவிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 40 நாட்களில் நான்கு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், யானைகள் இறப்பிற்கான முழுமையான காரணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. விதிமுறைகளை மீறி நடைபெறும் கனிமவள கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details