தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானை தாக்கியதில் செங்கல் சூளை தொழிலாளர் மரணம்!

கோயம்புத்தூர்: தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரியும் தொழிலாளர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

By

Published : Oct 12, 2020, 6:55 AM IST

elephant
elephant

கோயம்புத்தூர் மாவட்டம், மாங்கரை, பெரிய தடாகம், சின்ன தடாகம், வீரபாண்டி ஆகியப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கல் சூளைகளில் தென்மாவட்டம் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதி என்பதால், இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால், யானைகள் செங்கல் சூளைக்கு வெளியே நடமாடும் தொழிலாளர்களை தாக்குவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையான குடியிருப்புகள், கழிப்பிட வசதிகள் ஏதும் இல்லாததால் இயற்கை உபாதைகளை கழிக்க திறந்த வெளி கழிப்பிடத்தை நாடுகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு (அக்.11) செங்கல் சூளையில் பணிபுரியும் சரித்துல் இஸ்லாம் என்ற இளைஞர் இயற்கை உபாதையை கழிக்க செங்கல்சூளையை ஒட்டியுள்ள இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஆண் யானை ஒன்று இஸ்லாமை தும்பிக்கையால், தூக்கி வீசி, தந்தத்தால் குத்தியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் மார்பிலும் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த செங்கல் சூளை தொழிலாளர்கள் சத்தம் எழுப்பி யானையை விரட்ட முயற்சித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் பட்டாசு மற்றும் சைரன் ஒலி எழுப்பி, யானையை அங்கிருந்து விரட்டினர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த இளைஞரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சரித்துல் இஸ்லாம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

யானைகள் நடமாட்டம்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'செங்கல் சூளைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கழிப்பிட வசதிகள் ஏதும் செய்தும் கொடுக்காததால் இயற்கை உபாதையை கழிக்க வெளியே செல்லும்போது யானை தாக்குதல் தொடர்கிறது. கோடி கோடியாக சம்பாதிக்கும் செங்கல் சூளை உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு உரிய குடியிருப்பு வசதிகளையும், கழிப்பிட வசதிகளையும் செய்து தர வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:இவர் தான் நிகழ்கால ஷாஜகான்!

ABOUT THE AUTHOR

...view details