கோவை:போளுவாம்பட்டி வனச்சரகம் முள்ளங்காடு வனப்பகுதியில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியாறு பகுதியில் வனப்பணியாளர்கள் சென்றபோது ஆற்றின் ஓரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மரக் கிளைகளில் யானையின் மண்டையோடு மற்றும் எலும்புகள் சிக்கியிருந்ததை கண்டறிந்தனர்.
இதனையடுத்து கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமாருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் போளுவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வனத்துறை மருத்துவர் சுகுமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததில் ஆற்றின் நடுவே சிக்கியிருந்த யானையின் எலும்புக்கூடு பெண் யானையின் எழும்பு கூடு என்பதும் சுமார் 25 வயதுடைய யானை உயிரிழந்து சுமார் 90 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது.