கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகர், சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரேஷன் அரிசி கடத்துவதாக கிழக்கு காவல் நிலைய காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி உத்திரவின்படி காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து சூளேஸ்வரன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசி சேகரித்து சட்டவிரோதமாக கேரளா மாநிலத்திற்க்கு வாகனத்தில், 1, 050 கிலோ அரிசியை கடந்த முயன்றனர்.
இதை கண்டுபிடித்த காவல் துறையினர் அரிசியை பறிமுதல் செய்து இந்த கடத்தலில் ஈடுபட்ட கேரளா சித்தூரை சேர்ந்த சரவணன், சுபாஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.