கோவை: இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கோவை சங்கனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத், “இக்கூட்டத்தின் முதல் தீர்மானமாக நமது தமிழ்நாட்டை மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். தென் மாவட்டங்களைப் பிரித்து ஒரு மாநிலம் கொங்கு பகுதியைப் பிரித்து ஒரு மாநிலம் உருவாக்கிட வேண்டும். இதுதொடர்பான முன்னெடுப்புகளை கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப்பூர்வமான அனைத்து முயற்சிகளையும் இந்து மக்கள் கட்சி மேற்கொள்வதற்கு தீர்மானிக்கிறது.
தமிழ்நாட்டில் மதம்மாறி சென்றவர்களும் இந்து பட்டியலின சமூக மக்களுக்கு உரிய சலுகைகளை அனுபவித்துக் கொள்ள முடியும் என்ற சட்டத்தை தமிழக முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். இது சட்டப்பூர்வமாக செல்லாது. இதற்கு அதிகாரம் மத்திய அரசிற்குத் தான் உள்ளது. இது அம்பேத்கர் கொள்கைகளுக்கு மட்டும் அல்லாமல் அம்பேத்கரின் சட்டங்களுக்கும் விரோதமானது. இதனை நிறைவேற்றினால் கிறிஸ்தவர்கள் அதனைப் பயன்படுத்தி கொள்வார்கள்.
இது இவர்கள் உண்ணுகின்ற உணவை அவர்கள் பிடுங்கி தின்பதாகத்தான் அர்த்தம். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை போகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை போகிறது. அப்பாவு சட்டசபையை சட்டசபையாக நடத்தாமல் கிறிஸ்தவ சபை போல் நடத்துகிறார். எனவே, மதம் மாறிச் சென்றவர்களுக்கும் சலுகைகளை அளிப்பதை எதிர்த்து சட்டப்போராட்டத்தை இந்து மக்கள் கட்சி முன்னெடுக்கும்.
தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற தொகுதிகளும் பிரதமரின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். மீண்டும் மோடி வேண்டும். மோடி நாற்பதும் நமதே நாடாளுமன்றமும் நமதே என்ற அடிப்படையில் இந்து மக்கள் கட்சி தமிழ்நாட்டில் களப்பணி ஆற்றும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக உறுப்பினர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்.