தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கொட லொக்கா உடன் விடுதலைப் புலிகள் முன்னாள் செயற்பாட்டாளருக்கும் தொடர்பு - இலங்கை நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா உயிரிழந்த வழக்கு

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா தொடர்பான வழக்கு விசாரணையில் அவருக்கும், விடுதலைப் புலிகள் முன்னாள் செயற்பாட்டாளருக்கும் தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

அங்கோடா லொக்கா
அங்கோடா லொக்கா

By

Published : Jan 12, 2022, 7:14 PM IST

கோயம்புத்தூர்: இலங்கை நிழல் உலக தாதா எனக் கருதப்பட்ட அங்கொட லொக்கா கோவையில் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் உயிரிழந்தார். அவரது உடலை அவரது மனைவி அமானிதான்ஜி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகாம சுந்தரி ஆகியோர் போலி ஆவணங்களைக் கொண்டு பெற்று மதுரையில் தகனம் செய்தனர்.

இதற்கு தியானேஷ்வரன் என்பவர் உடந்தையாக இருந்தார். இது குறித்த விசாரணையை சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திவந்த நிலையில் அமானிதான்ஜி கைதுசெய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற இருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளிவந்தனர். அதே சமயம் உயிரிழந்தது அங்கொட லொக்கா தானா என்ற விசாரணையும் மேற்கொள்ளபட்டதில் டி.என்.ஏ. பரிசோதனையில் அவர்தான் என உறுதியானது.

மேலும் இந்த வழக்கில் தொடர் விசாரணை நடைபெற்றுவந்ததில் அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினரான சானுகா தனநாயக்கா, கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரை கடந்த நவம்பர் மாதம் பெங்களூருவில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர் சற்குணம் (எ) சபேசன், சின்னசுரேஷ், செளந்தரராஜன் ஆகியோர் மீன்பிடி கப்பலில் 1000 துப்பாக்கிகள், ஐந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், 300 கிலோ ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டதற்காக தேசிய புலனாய்வு முகமையால் 2021ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய பலகட்ட விசாரணையில், சபேசனுக்கும் அங்கொட லொக்காவிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், சபேசன் சானுகா தனநாயக்கா, கோபாலகிருஷ்ணன் இருவருக்கும் பெங்களூருவில் அடைக்கலம் கொடுத்துவந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கோவை மாவட்ட சிபிசிஐடி காவல் துறையினர் சபேசன், செளந்தரராஜன், சின்னசுரேஷ் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை காவலில் இருந்து எடுத்து விசாரணை நடத்தியதில் இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தியதில் இவர்கள் முக்கியப் பங்காற்றியது தெரியவந்தது. விசாரணைக்குப் பின் மூவரும் மீண்டும் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசில் பல்லி; கேள்வி கேட்டால் மரணம்... திமுக அரசின் ஜனநாயகப் படுகொலை!'

ABOUT THE AUTHOR

...view details