தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நம்ம ஊரு பள்ளி' திட்டத்தினால் அரசுப்பள்ளியில் அதிகரிக்கும் மாணவர்களின் வருகை - அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

கோவையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கொண்டாடப்பட்ட ‘நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் கீழ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அன்பில் மகேஷ், இத்திட்டத்தினை விவரித்து மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

By

Published : Jul 11, 2023, 6:48 PM IST

கோவையில் நம்ம ஊரு பள்ளி நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் பேட்டி
கோவையில் நம்ம ஊரு பள்ளி நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் பேட்டி

கோவையில் நம்ம ஊரு பள்ளி நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் பேட்டி

கோயம்புத்தூர்:அவினாசி சாலை 'நவ இந்தியா' பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் ‘நம்ம ஊரு பள்ளி’ திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், அவர்களது சி.எஸ்.ஆர்(Corporate Social Responsibility) பங்களிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ''பள்ளிகளில் கழிவறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பள்ளியின் கழிவறை எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் பள்ளிக்கூடமும் இருக்கும் என நம்புபவன் நான். இந்தத் திட்டம் ஆரம்பிக்கும்போது 12 நிறுவனங்கள் தான் இருந்தது.

தற்போது 132 நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளது. தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்புகள் அரசு பள்ளிகளுக்கு கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பள்ளிகளில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் விஸ்வநாதன் ஆனந்த், வேணு ஸ்ரீனிவாசன், உட்பட பல்வேறு உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர். சென்னையில் திட்டம் துவங்கப்பட்டு, கடந்த ஆறு மாதத்தில், சுமார் 7 ஆயிரத்து 294 பள்ளிகளுக்கு, என்னென்ன தேவைகள் உள்ளன என கேட்டறிந்து அவை அனைத்தும் நிறைவேற்றி தரப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

கோவை மண்டலத்தில் இருக்கின்ற CII(Confederation of Indian Industry)- உடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு தொழில் நிறுவனத்தின் உரிமையாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் இன்று மட்டும் 13.95 கோடி ரூபாய் பங்களிப்பு வந்துள்ளது. இதனைக் கொண்டு ஒவ்வொரு பள்ளியையும் மேம்படுத்த வேண்டும். அரசாங்கத்தினுடைய இந்த திட்டத்தினை ஊடகவியலாளர்கள் வெகுவாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தரப்பில் 9 தனியார் பள்ளிகளுக்கு சாதி, மதம் குறித்து மாணவர்களின் பதிவேட்டில் குறிப்பிடக் கூடாது என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, ''மாவட்ட அளவில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், இதுவரை நான் அதனை பார்க்கவில்லை. அதனைப் பார்த்து ஆராய்ந்து பின்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை தேடி வந்துள்ளார்கள். ஆகஸ்ட் மாதம் வரை சேர்க்கையின் கடைசி நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், கடைசி நாள் முடிந்த பின்பு எத்தனை சதவிகிதமானவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படும்'' என்று கூறினார்.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பள்ளி வருகையில் ஆப்சன்ட் போடப்பட்டுள்ளதாக எழுந்த கேள்விக்கு, இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ''பள்ளி கழிவறைகளை பொறுத்தவரை கூட்டத்தொடரில் பேசியது போல், 2 ஆயிரத்து 900துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதற்கென நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை கூட தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்குள்ள கழிவறைகளை இன்னும் மேம்படுத்த வேண்டி உள்ளது என்ற அறிவுரையை வழங்கி உள்ளேன்.

எனவே, ஆட்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் அந்தந்த நகர் மற்றும் பஞ்சாயத்து மூலம் ஆட்களை நியமிக்க அறிவுறுத்துவதுடன் நியமித்தும் வருகிறோம்'' என ஆய்வுகள் சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படுவது குறித்தான கேள்விக்கு 'NOC(National Occupational Classification) வரும்போது, அது குறித்தான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என பதிலளித்தார். பின்னர் மாணவர்களுக்கு 3 வருடங்களாக லேப்டாப் வழங்கப்படாதது குறித்து கேள்விக்கு, ''கரோனா காலத்திற்குப் பின்பு நிதிச் சுமைகள் அதிகமாக உள்ளதால், அவற்றையெல்லாம் களைந்து லேப்டாப் ஆக அளிக்கலாமா அல்லது டேப்லெட்டாக கொடுக்கலாமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' எனப் பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த பள்ளிக் கட்டணம் என்ன என்பது குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்கப்படாதது, குறித்து கேள்வி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது குறித்து தனியார் பள்ளி ஆணையத்திடம் விரைந்து பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், ''உளவியல் மருத்துவர்கள் தமிழகத்தில் போதுமான அளவிற்கு உள்ளார்கள். மேலும் தேவைப்பட்டால் அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்'' என்றார். பின்னர் மலைவாழ் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் வசதிகள் குறைவாக உள்ளது என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ''மலைவாழ் பள்ளிகளின் வசதிகள் சீரமைக்கும் பணியில் இரண்டு துறைகள் அடங்கியுள்ளன. இருவேறு துறைகளிடமிருந்து வெவ்வேறு கருத்துகளைப் பெறுவதால் இது குறித்து கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அமலாக்கத்துறை இயக்குனர் பணி நீடிப்பு சட்டவிரோதம்... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்குபிடி!

ABOUT THE AUTHOR

...view details