கோவை: திருநங்கைகள் என்றாலே சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும், ஏளன பேச்சுக்கு உள்ளாகுபவர்களாகவும் பார்க்கப்படுகிறது. வீட்டிலும் பொதுவெளியிலும் அவமரியாதையாக நடத்தப்படுவதால் வாழ்வாதாரத்திற்காக சாலையோரங்களில் பிச்சை எடுத்தும், பாட்டுப்பாடியும் பிழைத்து வருகின்றனர். தற்போது தான் ஒரு சில திருநங்கைகள் கல்வியில் சிறந்து விளங்கி அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிகளில் சேர்ந்து, தங்களது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் வேலைவாய்ப்பின்றி சாலையோரங்களில் வசித்து வந்த திருநங்கைகளை ஒன்றிணைத்து கல்கி சுப்பிரமணியம் ( திருநங்கை) என்பவர், பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சமையல் தொழில் கற்றுக் கொடுத்து சிறந்த சமையல் கலைஞர்களாக உருவாக்கியுள்ளார்.
இதன் அடுத்த கட்டமாக அவர்களுக்குள் இருக்கும் சமையல் கலையை அனைவரும் அறியும் விதமாக பாலக்காடு சாலையில் உள்ள அரிமா சங்கத்தில் திருநங்கை உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் சுமார் 17 திருநங்கைகள் பிரியாணி, சில்லி சிக்கன், முட்டை மசாலா, பெப்பர் சிக்கன், பாயாசம் உட்பட 20 வகையான ருசியான உணவுகளை சமைத்திருந்தனர்.