சென்னை திருவொற்றியூரில் வசித்துவருபவர் அபுதாஹிர் (59). இவரது மகள் மரியம் (29) ஏற்கெனவே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். இவருக்கு இரண்டாவது திருமணம்செய்ய முடிவெடுத்த பெற்றோர் திருமண தகவல் மையத்தில் மரியம் குறித்து தகவல்களைப் பதிவுசெய்தனர்.
இதனையடுத்து, திருமண தகவல் மையத்தின் மூலம் எம்.கே.பி. நகரைச் சேர்ந்த அஜ்மல் நிஷார் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அஜ்மல் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதால் அவருடன் மரியம் நெருங்கி பழகினார். இதனைப் பயன்படுத்தி அஜ்மல் சொந்த செலவுக்காக அடிக்கடி மரியத்திடம் பணம், நகைகளை வாங்கிச் சென்றுள்ளார்.
பர்மா கடைத்தெருவில் குளிரூட்டி (ஏசி), தொலைக்காட்சி போன்ற பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்த அஜ்மல், தொழிலில் பெரிய அளவில் முன்னேறியவுடன் திருமணம் செய்துகொள்ளலாம் என மரியத்திடம் கூறியுள்ளார். இந்நிலையில், அஜ்மல், மரியத்திடம் இரண்டு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய மரியம் இரண்டு கோடியே ஐந்து லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கு மூலம் அஜ்மலுக்குச் செலுத்தியுள்ளார். பல மாதங்களாகத் திருமணம் செய்துகொள்ளாமல் அஜ்மல் காலம் தாழ்த்திவந்ததால் சந்தேகமடைந்த மரியம் அவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
அப்போது அஜ்மல் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. பின்னர் மரியம் அஜ்மலிடம் இது குறித்து கேட்டபோது உன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்றும் பணம் நகையை, திருப்பித் தரவும் முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும், பணத்தை திருப்பிக் கேட்டால் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் மன வேதனையடைந்த மரியம், அஜ்மல் பற்றிய அனைத்து உண்மைகளையும் அவரது தந்தையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, மரியத்தின் தந்தை அபுதாஹீர் தனது நண்பரான ஜலீல் ரகுமான் என்பவரிடம் கூறி ஆள்களுடன் சென்று திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் இருந்த அஜ்மலை கிளைவ் பேக்டரியில் உள்ள குடோனுக்கு கொண்டுசென்று விசாரித்தபோது திருமணம்செய்து கொள்வதாக ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பின்னர் உடனடியாக அபுதாஹிர் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்துவந்தனர்.
பின்னர் அஜ்மலிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது செல்போனில் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. மேலும், இவர் பல பெண்களிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:பொருளாதாரத்தை குப்பையைப் போல் மோடி கையாண்டுள்ளார்' - ராகுல்