தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மொழிவாரி மாநிலமும், தமிழ்நாடு பெயர் மாற்றமும்' - முத்தரசன், வீரமணி பேச்சு! - தமிழ்நாடு உதயமான நாள்

சென்னை: மொழிவாரி மாநிலமும், தமிழ்நாடு பெயர் மாற்றமும் என்ற தலைப்பில் பெரியார் திடலில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.

Youngsters should know about the state formation protest

By

Published : Nov 2, 2019, 12:06 PM IST

சென்னை பெரியார் திடலில் மொழிவாரி மாநிலம் உருவாக்கமும் தமிழ்நாடு பெயர் மாற்றமும் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய முத்தரசன், "ஆந்திர மாநிலம் என்று தனியாக அமைக்க வேண்டும் என்று பொட்டி ஸ்ரீராமலு 64 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். நமக்கு முன்னதாகவே ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிக்க 16 பேர் ஆந்திராவில் உயிர் தியாகம் செய்தார்கள். இங்கு 2 பேர் சிறை சென்றார்கள். சங்கரலிங்கனார் மரணமடைந்தார். இது இளைஞர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இந்த வரலாறுகளை தெரிந்துகொண்டு தியாகம் செய்தவர்களை நினைவுகூர வேண்டும். விடுதலைக்குப் பிறகு இது மிகப்பெரிய போராட்டம். தமிழர்கள் அனைவரும் கொண்டாடவேண்டிய நாள்.

யூனியன் பிரதேசங்கள் மாநிலமாக மாறுவது வரவேற்கத்தக்கது. ஆனால் மாநிலத்தைப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கி அதில் ஒன்றுக்கு சட்டப்பேரவை, மற்றொன்றை நானே டெல்லியிலிருந்து ஆட்சி செய்வேன் என்கிறார்கள். இது தமிழ்நாட்டுக்கு வராது என்று நிச்சயம் உண்டா. நடைபெற்று முடிந்த இருமாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. அந்தச் சரிவை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகள் ஒருமித்து ஒரேஅணியில் எதிர்த்து நிற்க வேண்டும்" என்றார்.

இதையடுத்து கி. வீரமணி பேசுகையில், " சில வரலாற்று உண்மைகள் திரித்து கூறப்படுகின்றன. உண்மையை உரைக்க இந்த சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. நவம்பர் 1 என்பது தமிழ்நாடு உருவான நாள் அல்ல. இந்தநாள் சங்கரலிங்கனார் போன்றோர்களின் போராட்டத்தால் மொழிவழி மாநிலமாக உருவாக்கப்பட்ட நாள் என்று கூறலாம். ஆனால் 1968ஆம் ஆண்டு ஜுலை 18 அன்றுதான் சட்டப்பேரவையில் தமிழ்நாடு என்று அண்ணா அறிவித்தார். எனவே அதுதான் தமிழ்நாடு உதயமான நாள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்

மாநிலங்கள் தனியாக பிரிந்த பிறகு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் தந்தை பெரியார். பெரியாரின் வார்த்தைகள் அனைத்தையும் உள்வாங்கி அண்ணா ஆட்சிக்கு வரும்போது செயல்வடிவம் கொடுத்தார்.

தமிழன் என்று சொல்ல வேண்டும் என்றுதான் பெரியாரும் விரும்பினார். ஆனால் 'தமிழன் என்று சொன்னால் பார்ப்பனர்களும் வந்துவிடுவார்கள்' என்பதால்தான் திராவிடர் என்று கூறினார். திராவிடம் என்பது ஒரு பண்பாடு'' எனக் கூறினார்.

இதையும் படிங்க: பெற்றதும், இழந்ததும்' - தமிழ்நாடு 63

ABOUT THE AUTHOR

...view details