சென்னை:தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணியிடம் புதிதாகப் பணியில் சேர்வோருக்கு மிகவும் கவுரவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதல் நிலை காவலராகப் பணியில் சேர்ந்தால் கிட்டத்தட்ட பதவிக்காலத்தின் இறுதியில் தான் உதவி ஆய்வாளர் அந்தஸ்துக்கு சீரான பணி உயர்வின் மூலம் வந்தடைய முடியும்.
ஆனால், உதவி ஆய்வாளராகப் பணியில் சேருபவர் கிட்டத்தட்ட ஐ.பி.எஸ். மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாகும் குரூப் 1 அதிகாரிகளின் துவக்க நிலை பதவிகளை, பணிக்காலத்தின் இறுதியில் பெற முடியும். இதனால் எஸ்.ஐ. பணியிடம் குறித்த அறிவிப்பை இளைஞர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான எஸ்.ஐ. தேர்வுக்கான அறிவிப்பாணையை கடந்த சில நாட்களுக்கு முன்பு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதன்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க (மார்ச்.8) தொடங்கியது.
இதனிடையே, தமிழ்நாட்டில் சார்பு உதவி ஆய்வாளர் பணியில் உள்ள 444 காலி இடங்களுக்கு நேரடிப்போட்டிக்கான எழுத்துத்தேர்வு வருகிற ஜூன் 25 அன்று நடைபெறுகிறது. இதற்கான தேர்வு நேரம் காலை 10 மணிமுதல் 12.30 மணி வரை என வரையறுக்கப்பட்டுள்ளது.