தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின் ஆட்சியில் நீட் ரத்து செய்யப்படுமா?

பத்து வருடங்களுக்குப் பின் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கும் திமுக அரசால் நீட் தேர்வை ரத்து செய்யமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

By

Published : Sep 15, 2021, 6:48 AM IST

ஸ்டாலின் ஆட்சியில் நீட்
ஸ்டாலின் ஆட்சியில் நீட்

சென்னை: கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 2007ஆம் ஆண்டு ஆட்சியில் மருத்துவம் மற்றும் பொறியியலுக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது பத்து வருடங்களுக்குப் பின் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கும் திமுக அரசால் நீட் தேர்வை ரத்து செய்யமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது, நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசு சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவை நிறைவேற்றியுள்ளது. மேலும், ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஆனால், நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இரண்டு மாணவர்கள் சமீபத்தில் தற்கொலை செய்திருப்பது பெரும் பின்னடைவை திமுகவிற்கு தந்திருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

165 பக்க அறிக்கை

திமுக, அரசின் தவறான வழிகாட்டுதல் காரணமாக தனுஷ் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார். இதற்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்பதே எங்களின் நிலை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டி ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழுவை அமைக்கப்பட்டது. பொது மக்களிடையே பல்வேறு கட்ட ஆய்வுகள், ஆலோசனைகளை மேற்கொண்ட இந்த குழு, தனது 165 பக்க அறிக்கையில் நீட் சமூக நீதிக்கு எதிரானது, ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்று தெரிவித்து இருந்தது.

நீட் தேர்வை ரத்து செய்வாரா ஸ்டாலின்?

கடந்த 2005ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அரசு உத்தரவின் மூலம் தொழில் துறை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்ய முயன்றது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இதற்காக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

நீட்

அதன்பிறகு 2006இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நுழைவுத் தேர்வை ரத்து செய்து, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அனைத்து தரப்பில் இருந்தும் மாணவர்கள் சேர்க்கை என்ற புதிய சட்டத்தை இயற்றியது. மேலும் இந்த சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று மார்ச் 7-2007 அன்று நடைமுறைக்கு வந்தது. உயர் நீதிமன்றமும் இந்த சட்டத்தை உறுதி செய்தது. அப்போது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தலைவரின் ஒப்புதலை 2007இல் பெற்ற திமுக தற்போது இந்த மசோதாவை எப்படி நடைமுறைப்படுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் பிரதமர் மோடியும் எந்த ஒரு மாநிலத்திற்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மனநிலையில் இல்லை. அதுமட்டுட்மின்றி, நீட் தேர்வு மட்டுமே மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்ய முடியும் என்ற கடுமையான நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சவால்களை எதிர்த்து நிற்பாரா ஸ்டாலின்

ஆனால் தற்போது 2021 மசோதாவில் உள்ள ஒரே ஒரு புதிய அம்சம், நீதிபதி ஏ.கே.ராஜனின் அறிக்கை மட்டுமே. ஏழைகள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் மீது, நீட் ஏற்படுத்தும் சமூக பொருளாதார தாக்கம் குறித்த ராஜன் குழு அறிக்கையின் பெரும்பகுதி, மசோதாவின் முன்னுரையிலும் அதன் பொருள்கள், காரணங்களின் அறிக்கையிலும் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒன்றிய அரசின் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விக்குறி உள்ளது. இருப்பினும், குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தாலும்கூட அதிக சட்ட வேறுபாடுகளை ஏற்படுத்தாது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு மாணவர்கள் நலன் கருதி நீட் உள்ளிட்ட தேவைகளுக்கு ஒன்றிய அரசுடன் இணக்கம் காட்டுமா, அல்லது சவால்களை எதிர்த்து நிற்பாரா ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : நீட் தேர்வு - மேலும் ஒரு தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details