தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 8, 2023, 2:22 PM IST

ETV Bharat / state

Vande Bharat: சென்னை - விஜயவாடா வந்தே பாரத் ரயிலுக்கு தென்னக ரயில்வே மறுப்பு தெரிவித்தது ஏன்?

சென்னை - விஜயவாடா இடையே நேற்று வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார் என கூறப்பட்டதற்கு தென்னக ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்தான காரணத்தை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

Vande Bharat: சென்னை - விஜயவாடா வந்தே பாரத் ரயிலுக்கு தென்னக ரயில்வே மறுப்பு தெரிவித்தது ஏன்?
Vande Bharat: சென்னை - விஜயவாடா வந்தே பாரத் ரயிலுக்கு தென்னக ரயில்வே மறுப்பு தெரிவித்தது ஏன்?

சென்னை:கோரக்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோரக்பூர் - லக்னோ மற்றும் ஜோத்பூர் - அகமதாபாத் (சபர்மதி) ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி நேற்று (ஜூலை7) கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கோரக்பூர் - லக்னோ, ஜோத்பூர் - அகமதாபாத் மற்றும் சென்னை - விஜயவாடா ஆகிய மூன்று நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியது.

ஆனால், இரண்டு நகரங்களுக்கு மட்டுமே வந்தே பாரத் ரயில் தொடங்கிய நிலையில் சென்னை - விஜயவாடா இடையேயான சேவை ஏன் தொடங்கவில்லை என கேள்வி எழுந்தது. சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் 24 மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஏற்கனவே சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையில் இருந்து பெங்களூருக்கும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, சென்னை - விஜயவாடா இடையேயான சேவை தொடங்கப்பட்டால் தமிழ்நாட்டில் மூன்றாவது வந்தே பாரத் ரயில் இயக்கும் என பேசப்பட்டது.

மேலும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான ஆய்வுப் பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த ரயில் சென்னையில் இருந்து காட்பாடி, ரேணிகுண்டா, குண்டூர் வழியாக விஜயவாடா செல்லும் எனவும், விஜயவாடாவில் இருந்து மறுமார்க்கமாக அதே வழியாக திரும்பும் எனவும் கூறப்பட்டது.

சுமார் 630 கிலோ மீட்டர் தூரத்தை ஆறரை மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் சென்றடையும் என்றும், விஜயவாடாவில் இருந்து ரேணிகுண்டா வழியாக இந்த ரயிலை இயக்குவதன் மூலம் திருப்பதிக்குச் செல்பவர்கள் அதிகமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்பட்டன.

மேலும், ஜூலை 7ஆம் தேதி வந்தே பாரத் சேவை தொடங்கும் எனவும் ஜூலை 8ஆம் தேதி பயன்பாட்டிற்கு வரும் எனவும் கூறப்பட்டது. சென்னை - விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயில் ஏன் தொடங்கவில்லை என தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கு.கணேசனிடம் கேட்டபோது, “சென்னை - விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயில் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக எங்கள் தரப்பில் இருந்து அறிவிக்கவில்லை.

கோரக்பூர் - லக்னோ மற்றும் ஜோத்பூர் - அகமதாபாத் இடையே வந்தே பாரத் ரயில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். சென்னை - விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. எப்போது தொடங்கும் என்பதை சரியாக கூற முடியாது” என தெரிவித்தார்.

சென்னை - விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தது. வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான முக்கிய நோக்கம் பயண நேரத்தைக் குறைப்பது. ஆனால், வழக்கமாக தற்போது சென்னை - விஜயவாடா இடையே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 5.45 மணி நேரத்திலும், ஒரு சில ரயில்கள் 5.30 மணி நேரத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வந்தே பாரத் ரயில் ஆறரை மணி நேரத்தில் இயக்கப்பட்டால் நேரம் எப்படி குறையும் என்ற கேள்வியும் எழுகிறது. சென்னையில் இருந்து விஜயவாடாவிற்கு தற்போதைய தூரம் 431 கில்லோ மீட்டர் ஆகும். ஆனால், வந்தே பாரத் சென்னையில் இருந்து விஜயவாடாவிற்கு 630 கிலோ மீட்டர் என சொல்லப்படுகிறது.

வந்தே பாரத் ரயில் காட்பாடி சென்று அதற்கு பிறகு ரேணிகுண்டா, குண்டூர் வழியாக விஜயவாடா செல்கிறது. இதனால் இதனுடைய தூரம் அதிகமாக இருக்கிறது. வழக்கமான ரயில்கள் சென்னையில் இருந்து இடையில் நிறுத்தாமல் விஜயவாடாவிற்கு செல்வதால் நேரம் குறைவாக இருக்கிறது.

ஆனால், வந்தே பாரத் ரயில் சென்னைக்கும் விஜயவாடாவிற்கும் இடையில் உள்ள காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா மற்றும் குண்டூர் ஆகிய நகரங்களுக்கு விரைந்து செல்லும் என கூறப்படுகிறது. ஆனால், சென்னையில் இருந்து விஜயவாடாவிற்குச் செல்ல வழக்கமான ரயில்களை விட 45 நிமிடங்கள் அதிகமாகின்றன.

இது போன்ற நேரம் அதிகம் மற்றும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சென்னை - விஜயவாடா இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவில்லையா என்று தென்னக ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சென்னை - விஜயவாடா இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முடிந்த அளவிற்கு கோரக்பூர் - லக்னோ மற்றும் ஜோத்பூர் - அகமதாபாத் இடையே தொடங்கப்பட்ட சேவையோடு தொடங்கி விடலாம் என பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. ஆனால், காட்பாடி வழியாக இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டதாலும், மேலும் சில பணிகள் நிறைவடையாத காரணத்தாலும் காலதாமதம் ஆகிறது. விரைவில் சென்னை - விஜயவாடா இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கும்” என பதில் அளித்தார்.

மேலும், சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Vande Bharat: வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் குறைப்பு? குறைவான பயணிகளின் வருகையால் முடிவா?

ABOUT THE AUTHOR

...view details