தமிழ்நாட்டில், வெளிமாநிலத்தவர்களால் அரங்கேற்றப்படும் குற்றங்கள் அதிகமாகிக் கொண்டேவருகிறது. குறிப்பாக வடமாநிலக் கொள்ளையர்களின் அட்டகாசத்தாலும், அங்கிருக்கும் சைபர் கொள்ளையர்களாலும் தமிழ்நாடு மக்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
அத்தோடு அருகில் இருக்கும் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தலும் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. இந்தக் குற்றங்களை அரங்கேற்றும் வெளிமாநிலத்தவர்கள் குற்றங்களைச் செய்துவிட்டு சொந்த ஊருக்குத் தப்பிச்சென்று பதுங்கிவிடுகின்றனர்.
தமிழ்நாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களைப் பிடிப்பதற்காகத் தனிப்படையுடன் வெளிமாநிலங்கள் சென்று முகாமிட்டு குற்றவாளிகளைக் கைதுசெய்கின்றனர்.
ஆனால், இந்த வெளிமாநிலக் குற்றவாளிகளைப் பிடிப்பது தமிழ்நாடு காவல் துறையினருக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. அதுமட்டுமில்லாமல் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் மிரட்டல்கள், தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தொழில்நுட்பம் இல்லாத காலத்திலிருந்து இந்தப் பிரச்சினை நிலவிவருகிறது.
நேற்று (ஏப். 27) அதிகாலை ஆந்திராவில் கஞ்சா வியாபாரியைப் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு தனிப்படை காவல் துறையினரை நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்கியுள்ளனர். இதில், உதவி ஆய்வாளர் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர். இதுபோன்று வெளிமாநிலத்திற்குச் சென்று குற்றவாளிகளைப் பிடிக்கும்போது காவலர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.
குறிப்பாக 1995-2006 காலகட்டத்தில் ஓய்வுபெற்ற டிஜிபி ஜாங்கிட், பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்கச் செல்லும்போது, சந்தித்த சவால்கள் குறித்து புத்தகமாகவே வெளியிட்டார். அது தீரன் அதிகாரம் ஒன்று என்ற பெயரில் படம் வெளியானது. தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்திலிருந்து தற்போதுவரை வெளிமாநிலத்திற்குச் சென்று குற்றவாளிகளைப் பிடிப்பது காவல் துறையினருக்கு எளிதான காரியமல்ல.
கொளத்தூரில் நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்களைத் தனிப்படை காவல் துறையினர் பிடிக்கச் செல்லும்போது, காவலர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து தனிப்படை காவலர் பெரியபாண்டி என்பவர் உயிரிழந்தார்.
மேலும் போலி அழைப்புதவி மையம், காவல் உயர் அலுவலர்கள் பெயரில் போலி சமூக வலைதளக் கணக்குகளை உருவாக்கி மோசடி செய்த குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும்போது, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களுக்குச் செல்லும் தனிப்படை காவலர்களை குற்றவாளிகளின் கிராம மக்கள் சிறைப்பிடித்து தாக்கிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. கிராம மக்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து குற்றவாளிகளை அனுப்புவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.