சென்னை: விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், "குடியரசுத் தலைவருக்கு 2022 பிப்ரவரி 3ஆம் தேதி அனுப்பிய மனுவில், நீட் தேர்வு ரத்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாவிற்குத் தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளிக்க மறுத்து வருகிறார். எனவே, அவரை மாற்ற வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பினேன்.
மேலும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை மாநிலங்களின் அனுமதியின்றி, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஏழை அரசுப்பள்ளி மாணவர்களின் கனவு பறிபோகிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு என்பது சாத்தியமானதே.
குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்திருந்தால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்த சட்ட மசோதாவின்படி தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்கப் பெற்றிருக்கும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவைத் திரும்ப அனுப்பிய ஆளுநரை மாற்ற வேண்டும். தமிழ்நாடு ஆளுநரை மாற்றம் செய்யாவிட்டால் ஆண்டு தோறும் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்" எனவும் அதில் கூறியிருந்தார்.
இதனையடுத்து, அந்த மனுவை மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு மையம் ஏற்றுக்கொண்டு அதற்கான ஒப்புதல் எண்ணை PRSEC/E/2022/03308 வழங்கி உள்ளது. மேலும், அந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்குப் பரிந்துரை வழங்கி உள்ளது.