தமிழ்நாடு

tamil nadu

O Panneerselvam: டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு.. அதிமுகவில் அரசியல் மாற்றம் நிகழுமா?

By

Published : May 9, 2023, 7:06 AM IST

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்கும் நிலையில் இவர்களின் இணைப்பானது அதிமுகவை மீட்டெடுக்க உதவுமா? அல்லது அதிமுகவில் அரசியல் ரீதியாக ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.

OPS meeting with TTV Dhinakaran What kind of impact will their merger have on politics
டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு; இவர்கள் இணைந்தது அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (மே 8) திடீரென சந்தித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ்சிற்கும், ஈபிஎஸ்சிற்கும் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்து டிடிவி தினகரனையும், சசிகலாவையும் நேரடியாக சென்று சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறி கொண்டே வந்தார். ஆனால், இதற்கு அமமுக தனி இயக்கம் எனவும் பொது எதிரி திமுகவை வீழ்த்துவதற்கு கூட்டணி அமைக்க தயார் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

நான் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்கிறேன் எனவும் சசிகலா கூறியிருந்தார். இது ஒருபுறம் இருக்க தன்னை அதிமுகவில் இருந்து நீக்கிய பொதுக்குழு செல்லாது என நீதிமன்றங்களிலும், தேர்தல் ஆணையத்தையும் நாடிய ஓபிஎஸ்ஸிற்கு இறுதியாக தோல்வியே கிடைத்தது. எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளராக அங்கீகரித்திருக்கும் நிலையில் ஓபிஎஸ்சிற்கு அதிமுகவில் இடமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த கட்ட நகர்வுகளை ஓபிஎஸ் முன்னெடுத்துள்ளார்.

முதற் கட்டமாக கடந்த மாதம் 24ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடத்தினார். இதற்கு, டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் கலந்து கொள்ளவில்லை. இந்த மாநாட்டின் மூலம் தொண்டர்கள் என்பக்கம் தான் இருக்கிறார்கள் என்று ஓரளவிற்கு நிரூபித்த ஓபிஎஸ், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தார். டிடிவி தினகரனுடன் சந்திப்பை நிகழ்த்திய ஓபிஎஸ், அடுத்தகட்டமாக சசிகலாவையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

டிடிவி தினகரனுடன் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவை மீட்கவே இருவரும் ஒன்றிணைந்துள்ளோம் என டிடிவி தினகரன் கூறியிருந்தார். ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை கொண்ட முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் ஒன்றிணைவதால் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த முடியும் என இவர்களின் ஆதரவாளர்கள் நம்புகின்றனர். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கூற்றுப்படி எடப்பாடி பழனிசாமியை துரோகி என கூறி டிடிவி தினகரனும், ஓபிஎஸ்சும் இணைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். அன்று சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்சை இணைத்துக் கொண்டு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை நீக்கினார். அன்று ஓபிஎஸ்சிற்கு எதிரியாக இந்த டிடிவி தினகரன் இன்று நண்பனாக மாறியுள்ளார். அதிமுகவில் தேனி மாவட்ட செயலாளராக இருந்த சையதுகான், இவர்களின் இணைப்பிற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியை எதிர்கொள்வது, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது, அதிமுகவை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மீட்பது தொடர்பாகவும், அடுத்தடுத்த மாநாடு மற்றும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும், பாஜகவுடனான கூட்டணி தொடர்பாகவும், மேலும் அடுத்தகட்ட நகர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தாலும், ஓபிஎஸ்ஸை பாஜக தலைவர்கள் முழுமையாக கைவிடவில்லை. சமீபத்தில் உங்கள் கூட்டணியில் ஓபிஎஸ் இருப்பாரா? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். மேலும், பிரதமர் மோடியுடன் நட்பில் இருப்பவர்களை கைவிட முடியாது என அண்ணாமலை கூறியிருந்தார்.

அனைவரையும் இணைக்கக்கோரி பாஜக எவ்வளவுதான் அழுத்தம் கொடுத்தாலும் எடப்பாடி பழனிசாமி அந்த ஒன்றை மட்டும் ஏற்க மறுத்துவிட்டார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற அமித்ஷா, ஈபிஎஸ் சந்திப்பில் அதிமுகவிற்கு 20, பாஜகவிற்கு 20 தொகுதிகள் என பேசப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. பாஜகவிற்கு கொடுக்கப்படும் இடங்களில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுக்கு உள் ஒதுக்கீடு செய்ய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்க மறுப்பதாக தெரிகிறது.

டிடிவி தினகரன், ஓபிஎஸ் இணைப்பு என்பது அண்ணாமலைக்கு சாதகமான விவகாரமாக பார்க்கப்படுகிறது. தற்போதும், தனித்துப் போட்டி என்ற மனநிலையில் செயல்பட்டுவரும் அண்ணாமலைக்கு தென் மாவட்டங்களில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் ஆதரவு தேவைப்படும். ஒருவேளை அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறும் பட்சத்தில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், தாமக, புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை அதிமுகவில் இருந்து நீக்கியவர் எடப்பாடி பழனிசாமி. ஏற்கனவே, இவர்கள் மூவரும் அதிமுகவில் இல்லை என்று பல முறை அதிமுகவின் அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன், ஓபிஎஸ் இணைப்பு குறித்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும் என்று அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டாலும், தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை இவர்கள் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகிய இருவரின் இணைப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். தற்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதால் ஓபிஎஸ்-சிற்கு வேறு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இவர்கள் இணைப்பானது சமுதாய ரீதியாகவும் விமர்சனம் செய்யப்படும். தென்மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு அலை இருக்கிறது. அந்த எதிர்ப்பு வாக்குகளை ஒன்றிணைக்கவே இருவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

பாஜக இன்னும் ஓபிஎஸ்சை முழுமையாக கைவிடவில்லை. அதனால் இதுபோன்ற பல முயற்சிகளை ஓபிஎஸ் எடுப்பார். அதிமுக விவகாரங்களில் தலையீடு என்று கூறினாலும், அனைவரையும் ஒன்றிணைக்க பாஜக முயற்சி செய்யும். இந்த சந்திப்பானது அரசியல் ரீதியாக உதவுமா? அல்லது தாக்கைத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: இரு அணியினரும் இணைந்து செயல்பட முடிவு; ஓபிஎஸ் - டிடிவி தினகரன் கூட்டாகப் பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details