சென்னை:இந்தியாவில் தற்போது தங்கத்தின் விலையானது தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலையானது, சவரனுக்கு ரூ.888 வரை குறைந்துள்ளது. தங்கம் வாங்கும் மற்றும் தங்கம் முதலீடு செய்பவர்கள் என்னதான் தங்கத்தின் மீது தனி கவனம் செலுத்தி வந்தாலும் இந்தியாவில் தங்கத்தின் விலையானது மிகக் குறைந்த அளவில் தான் குறைந்துள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில், கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று தங்கம் தன் சரிவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. இதனால், செப்.25 ஆம் தேதி - சவரனுக்கு ரூ.8, செப்.26 ஆம் தேதி - ரூ.120ம், செப்.27 ஆம் தேதி - ரூ.200ம் மற்றும் செப்.28 ஆம் தேதியான இன்று ரூ.560 என கடந்த 4 நாட்களில் மட்டும் தொடர்ந்து, தங்கம் சவரனுக்கு ரூ.888 குறைந்துள்ளது. இது பெரிய அளவில் இருந்தாலும் கூட, சர்வதேச சூழ்நிலையில் இது குறைவாக தான் பார்க்கப்படுகிறது.
இது குறித்து, சென்னை தங்க, வைர வியாபரிகள் சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், "தங்கம் விலை என்பது, சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச வங்கிகளின் நிலைபாடு, முதலீட்டுளார்களின் முதலீடுகள், சர்வதேச அரசியல் சூழ்நிலை, உலகளாவிய சம்பவங்கள் என உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
தங்கம் விலை என்பது, தினமும் ஏற்றம் இறக்கம் கொண்டு தான் இருக்கும். கடந்த ஏப்ரல், மே மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. அதைத்தொடர்ந்து, தங்கத்தின் விலை மெல்ல மெல்ல நிலையானதாக வந்தது. இந்த செப்டமபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது ஏற்றம் இறக்கமோடு தான் இருந்து வருகிறது.
மேலும் தங்கத்தின் விலையானது தேவை மற்றும் அளிப்பு (Demand and Supply) வைத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது உலகளவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து மீள தொடங்கியுள்ள நிலையில், அந்நாட்டு டாலரின் மதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் தங்கத்துக்கு பதில் டாலரில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.