தமிழ்நாடு

tamil nadu

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

By

Published : Sep 30, 2019, 12:15 PM IST

சென்னை: பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலால் உடல்நலக்குறைவும் பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை உயிரிழந்துவரும் நிலையில், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சுகாதாரத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்பாததும், அதில் அரசு மெத்தனப்போக்கை காட்டுவதும்தான் காரணமென சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், சுகாதாரத் துறை சார்ந்த நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டுமெனவும் டெங்கு பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உத்தரவுகள் பிறப்பித்து அவற்றை கண்காணிக்க வேண்டும்.

மேலும் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கு அரசு செலவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், என். சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலை ஓரங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு அடியில் தேங்கியிருக்கும் நீரிலிருந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக மனுதாரர் குற்றஞ்சாட்டினார்.

நடைபாதைகளை விரிவுபடுத்தியது, வாகனங்களை நிறுத்தவா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது பொதுமக்களின் சமூக கடமை எனவும் சுட்டிக்காட்டினர்.

மேலும், டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசும் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சியும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:டெங்கு எதிரொலி: மாங்காட்டில் 7 டன் பழைய டயர்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details