சென்னை:சென்னையில் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி நடந்த மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைகோவின் மகன் துரை வைகோ தலைமைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்திற்குக் கட்சியில் சிலர் அதிருப்தி அடைந்தனர்.
இந்தநிலையில் மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோவின் (headquarters Secretary) பணிகள் குறித்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,
1. மதிமுக சட்ட திட்ட விதி எண்: 23 இன் படி கழகப் பொதுச்செயலாளர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
2. கழக சட்ட திட்ட விதி எண்: 26 இன் படி, தலைமைக் கழகத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும், கழகத்தின் எல்லா அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் தலைமை நிலையம் இயங்கி வருகின்றது. கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இயங்கும் தலைமை நிலையப் பணிகளை, தலைமைக் கழக செயலாளர் ஒருங்கிணைப்பார்.