தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு தேர்தலில் முறைகேடுகளை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன - நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் - erode by election winners list

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Feb 20, 2023, 8:03 PM IST

சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவரது மனுவில், ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்த போது, தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்களில், 7 ஆயிரத்து 947 இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பதும் 30 ஆயிரத்து 56 வாக்காளர்கள் தொகுதியில் வசிக்கவில்லை என்பதும் தெரிய வந்ததுள்ளது.

ஆகவே, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு எந்திரத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென் உயர் நீதிமன்றம் உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (பிப். 20) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆனி ஜோசப் தாக்கல் செய்த அறிக்கையில், தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பின், அதில் தலையிடும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. வெறும் யூகங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். தேர்தலில் முறைகேடுகள் நடக்கும் என்று மனுதாரர் அச்சம் தெரிவிக்க எந்த காரணங்களும் இல்லை.

அதேபோல தொகுதியில் வசிக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். முறைகேடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இறந்தவர், தொகுதியில் வசிக்காதவர்களின் பட்டியல் தேர்தல் அலுவலரிடம் வழங்கப்பட்டு, அதை சரிபார்த்த பிறகே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். இறந்தவர், தொகுதியில் இல்லாதவர்கள் பட்டியல் ரகசியமானது. அதை வெளியிட்டால் ஆள்மாறாட்டம் செய்ய வாய்ப்புண்டு.

பூத் ஸ்லிப்கள் கட்சி ஏஜெண்ட்களால் விநியோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் அலுவலர்கள் மூலம் மட்டுமே விநியோகிக்கப்படும். பணப்பட்டுவாடாவை தடுக்க 12 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் உள்ள 238 வாக்கு சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா, வெப் காஸ்டிங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்த புகாருக்கும் இடம் தராத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 409 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதட்டம் நிறைந்த 34 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என விளக்கமளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டு, நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாக நேரிடும்.. டிஜிபிக்கு ஆர்எஸ்எஸ் நோட்டீஸ்..

ABOUT THE AUTHOR

...view details