தமிழ்நாடு

tamil nadu

"2026ஆம் ஆண்டு பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம்" - அன்புமணி

By

Published : Nov 21, 2022, 8:12 PM IST

2026ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றும், 2024ஆம் ஆண்டில் அதற்கான வியூகங்களை அமைப்போம் என்றும், பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

pmk
pmk

சென்னை: சென்னையில் உள்ள தென்னக ரயில்வே மேலாளர் அலுவலகத்தில், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்-ஐ நேரில் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரயில் திட்டங்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அன்புமணி, "தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரயில் திட்டம் குறித்து ரயில்வே மேலாளர் இடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். தருமபுரி- மொரக்கூர் ரயில் திட்டம், திண்டிவனம்- நகரி ரயில் இணைப்பு, திண்டிவனம்- திருவண்ணாமலை ரயில் திட்டம், சென்னை- மகாபலிபுரம்- கடலூர்- புதுச்சேரி இணைப்பு திட்டம், ஈரோடு -பழனி இணைப்பு திட்டம், மதுரை - தூத்துக்குடி இணைப்பு திட்டம், உள்ளிட்ட திட்டங்கள் குறித்துப் பேசினோம்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு போதுமான அளவிற்கு நிதி வந்துள்ளது. சில ரயில் திட்டங்களில் பல ஆண்டுகள் நிறைவடைந்தும் முன்னேற்றம் ஏற்படவில்லை. தருமபுரி - மொரப்பூர் ரயில்வே திட்டம் என்பது 70 ஆண்டுகள் மக்களின் கனவுத்திட்டம். இது தொடர்பாக பல அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சந்தித்து இந்தத் திட்டம் குறித்து பேசி இருக்கிறேன். ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் இத்திட்டம் இன்னும் சரியான அளவில் தொடங்கப்படவில்லை, இன்னும் நிலத்தை கையகப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.

அடுத்த கட்டமாக மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள மற்ற திட்டங்களைப் பற்றி பேச உள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே துறையில் பணம் வராது என்று கண்ணோட்டத்தில்தான் பார்த்தார்கள். தற்போது மக்கள் நலன் சார்ந்து பார்க்கிறார்கள், அது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ரயில்களில் செல்கிறார்கள். அதனால், நஷ்டம் ஏற்பட்டாலும் மக்களின் நலனுக்காக அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பிரதமர் கிசான் திட்டம் மூலம், கடந்த 2019ஆம் ஆண்டு 90 சதவீத விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இது கடந்த ஆண்டு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 30 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. அதை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும். தற்போது வடகிழக்குப் பருவமழை உச்சத்தில் உள்ளது. சென்னை மாநகரில் மழை நீர் வடிகால் பணிகளை முடிக்காததால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை வந்தாலே அதை ஒரு சில பேர் சாபமாக பார்க்கிறோம், அதை வரமாக நாம் பார்க்க வேண்டும். அடுத்து பத்து பதினைந்து ஆண்டுகளில் மழை குறைந்துவிடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இருக்கக்கூடிய மழையை நாம் சேமிக்க வேண்டும்.

சென்னையில் சுற்றி உள்ள ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், மகாபலிபுரம் போன்ற 10 இடங்களில் புதிய எரியை தமிழக அரசு உருவாக்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், ஆறுகளில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குதான் இரண்டு கட்சிகளும் திட்டமிடுகிறார்கள், 30- 40 ஆண்டுகளுக்கு திட்டமிடுவதில்லை.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீட்டை 81 சதவீதமாக உயர்த்த அம்மாநில முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். அதில் குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு 32 விழுக்காடு தர முடிவு செய்துள்ளார். அதை பாமக வரவேற்கிறது. தமிழ்நாட்டில் பிராமணர், ரெட்டியார், நாயுடு, நாடார், முதலியார், வெள்ளாளக் கவுண்டர், தேவர், தாழ்த்தப்பட்டவர்கள் என அந்தந்த சமுதாயத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

முதலமைச்சர் மற்றும் ஆளுநர் அரசியலமைப்புக்குட்பட்டவர்கள். அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்து, எந்தவித ஈகோவும் இல்லாமல் இணைந்து செயல்பட வேண்டும், இல்லையென்றால் அது தமிழக மக்களைத்தான் பாதிக்கும்.

2026-ல் பாமக தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கான வியூகங்களை 2024-ல் அமைப்போம். காசி தமிழ் சங்கத்திற்கான விளம்பரத்தைக் குறைத்து இருக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து இங்கு யாரேனும் பேசுகிறார்களா?

தனியார் பால் விலையைக் குறைக்க வேண்டும். தனியார் பால் நிறுவனம் மாஃபியா போன்று செயல்படுகிறார்கள். மாபியாவை குறைக்க வேண்டும்.

தேர்தல் கூட்டணி குறித்து நான் தற்போது பேசவில்லை. 2026-ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று மட்டுமே தெரிவித்தேன். அதற்கான யூகங்களை 2024ஆம் ஆண்டு அமைப்போம் என்று மட்டுமே கூறினேன்.

பிரியா மரணம் தொடர்பான வழக்கில், தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும். ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மருத்துவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:'பிரியா இறப்பு; நடவடிக்கை எடுக்கலாம் என மருத்துவர்களே பரிந்துரை'

ABOUT THE AUTHOR

...view details