தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 31, 2021, 12:10 PM IST

ETV Bharat / state

கரோனா தொற்று தாக்கம்: தாய்மார்கள் தப்பிக்க என்ன வழி?

கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் கரோனா தொற்றிலிருந்து தப்பிக்கு வழி குறித்து முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர். க.குழந்தைசாமி கூறுவதை காணலாம்.

covid
கரோனா தொற்று

சென்னை:கரோனா தொற்றின்முதல் அலையின் போது பெரும்பாலும் நடுவயதினர், வயதானவர்களுக்கே தொற்று அதிகமாக ஏற்பட்டது. தற்போது சமுதாயத்தில் மிக அதிக அளவில் கரோனா கிருமி பரவியுள்ளதால், இள வயதினருக்கும், குழந்தகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தொற்று ஏற்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கரோனா தொற்று ஏற்படுவதைத் தடுப்பது எப்படி? என்பது குறித்து விளக்குகிறார், முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர்.க. குழந்தைசாமி.

டாக்டர்.க.குழந்தைசாமி

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தொற்று எப்படி ஏற்படுகிறது?

1. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளுக்கு கர்ப்பகாலப் பரிசோதனைக்குப் போகும் போது, காய்ச்சல், சளி மற்றும் பிற காரணங்களுக்காக வருபவர்களிடமிருந்து இவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. பல மருத்துவமனைகளில், ஆய்வகப் பரிசோதனை மேற்கொள்ளும் இடங்கள், ஸ்கேன் பரிசோதனை செய்யும் இடங்கள், மருந்து வழங்கும் இடங்கள் என பல சேவைகள், கரோனா அறிகுறிகளுடன் வருபவர்கள் உள்பட எல்லோருக்கும் பொதுவானதாக உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. கர்ப்பிணிகளைப் பார்த்துவிட்டு வரலாம், குழந்தையைப் பார்த்துவிட்டு வரலாம் என வீட்டுக்கு வருகிற உறவினர்கள் மூலமாக தொற்று பரவலாம்.

3. வீட்டிலிருந்து வெளியே சென்று திரும்புகிறவர்கள் மூலமாகவும் பரவலாம்.

4.பாரம்பரியமாக நடத்துகிற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏராளமான உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து கூட்டம் சேர்ப்பதாலும் தொற்று ஏற்படலாம்.

5.மருத்துவ மனைக்கு குழந்தையைப் பார்க்க வரும் உற்றார், உறவினர் மூலம் தொற்று ஏற்படலாம்.

கர்ப்பிணிப் பெண்கள்
கரோனா தொற்று ஏற்படுவதைத் தடுப்பது எப்படி?
1. கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு மருத்துவமனைகளில் கூட்டம் குறைவாக உள்ள போது தான் செல்ல வேண்டும்.

2. கர்ப்பிணிகளுடன் உடன் இருப்பவர்கள், குடும்பத்தினர் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

3. கர்ப்பிணிகளைப் பார்க்க வீட்டிற்கு யாரும் வரக் கூடாது.

4. கரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை வளைகாப்பு விழா நடத்தக் கூடாது.

5. கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மருத்துவ ஆலோசனையுடன் தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போட வேண்டும்.

6. பிறந்த குழந்தையைப் பார்க்கவும் யாரும் வரக்கூடாது.

7. குழந்தைக்கு தடுப்பூசி போடப் போகும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிரசவத்தின் போது ஒரேயொரு பெண் துணை (Birth Companion) உடன் இருந்தால் போதுமானது. குழந்தையைப் பார்க்க உறவினர்கள், நண்பர்கள் யாரும் மருத்துவமனைக்கு செல்லக் கூடாது.

வளைகாப்பு விழா நடத்தக் கூடாது

மருத்துவ மனைகளின் பொறுப்பு

1. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகளுக்கு தனி இடம், தனி நேரம் ஒதுக்க வேண்டும்.

2. மருத்துவமனைகளில் ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளும் இடங்கள், ஸ்கேன் பரிசோதனை செய்யும் இடங்கள், மருந்து பெறும் இடங்கள் என அனைத்து சேவைகளும் கர்ப்பிணிகளுக்கு தனியாக வழங்கப்பட வேண்டும்.

3. தாய் சேய் நலப் பிரிவு மருத்துவமனையின் மற்ற பிரிவுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

4. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஆரோக்கியமான, வயது குறைந்த பெண் துணை ஒருவரை மட்டுமே உடனிருக்க அனுமதிக்க வேண்டும். பார்வையாளர்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்கக் கூடாது.

5. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாயாக உள்ள பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகதாரப் பணியாளர்களை நேரடி மருத்துவப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. கட்டுப்பாட்டு அறை, தொலைபேசி வாயிலாக ஆலோசனை போன்ற பணிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாலூட்டும் தாய்மார்கள்
கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
1. சளி, தும்மல், இருமல், காய்ச்சல், தொண்டைவலி, கடுமையான தலைவலி, உடல்வலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.


2. சளி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

3.நடமாடும் மருத்துவமனை, மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

4. கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

5. கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சிறப்புக் கவனம் வழங்கப்பட வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்

உங்கள் ஊருக்கான ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர், கிராம சுகாதார செவிலியர்களின் கைபேசி எண்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்

உதவி எண்கள்

102, 104, 108 மற்றும் மாவட்ட மாநில உதவி எண்களைக் (044-29510400; 044-29510500; 94443 40496 & 87544 48477) குறித்து வைத்துக் கொண்டு தேவையான நேரத்தில் அவசர உதவிக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள பொதுவான வழிகாட்டுதல்கள்

1. முகக் கவசம் அணிதல்

2. கைகளை அடிக்கடி நன்கு கழுவுதல்

3. சக மனிதர்களிடமிருந்து இரண்டு மீட்டர் தள்ளி இருத்தல்.

4. கூட்டம் கூடும் இடங்கள், நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதிருத்தல்.

5. கைகள் அடிக்கடி படக்கூடிய இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்.

6. கதவு ஜன்னல்களை நன்கு திறந்து காற்றோட்டமாக வைத்துக் கொள்ளுதல்.

7. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல்.

தற்போதுள்ள அபாயகரமான சூழ்நிலையை மனதில் கொண்டு, தயவு செய்து கர்ப்பிணிப் பெண்களையும் பாலூட்டும் தாய்மார்களையும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் பார்த்துக் கொள்ளுங்கள்!

இதையும் படிங்க: கரோனா தொற்றிலிருந்து மீண்ட தொழில் அதிபர் கறுப்பு பூஞ்சையால் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details