சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். ரம்யா அவுட்சோர்சிங் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரம்யா அவுட் சோர்சிங் சொல்யூஷன் பிரைவேட் லிமிடட் என்ற பெயரில் மேன்பவர் அவுட்சோர்சிங் தொழில் செய்து வருகிறேன். இந்த நிறுவனம் ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.
இந்த நிறுவனத்திற்கு மார்ச் 2021இல் ஜிஎஸ்டி சம்பந்தமாக சோதனை செய்ய உயர் அலுவலர்கள் வந்தனர். 2017-18 மற்றும் 2019-20 நிதி ஆண்டில் 4.75 கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டுபிடித்தனர்.
அந்த தொகையை உடனடியாக செலுத்த நோட்டீஸ் கொடுத்து சென்றனர். இதையடுத்து, இந்நிறுவனத்தின் ஆடிட்டர் மோகன் பாபுவை இதுசம்பந்தமாக அணுகினேன். அப்போது தணிகைவேல் என்பவர் தன்னிச்சையாக அறிமுகமாகி தனக்கு வருமானவரித்துறை அலுவலகத்தில் உயர் அலுவலர்களைத் தெரியும் என்று கூறி நம்ப வைத்தார். நிறுவனத்திற்கு கொடுத்த நோட்டீஸை ரத்து செய்ய வைப்பதாக கூறினார்.
ரூ.1 கோடி மோசடி:இது சம்பந்தமாக சென்னையில் உள்ள வருமானவரித்துறை கமிஷனர் தீபக் கோதாரியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி 22.3.2021ஆம் தேதி கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.
அப்போது ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் நோட்டீஸை ரத்து செய்வதாக கூறினார். இதனை நம்பி தணிகைவேல், தீபக் கோத்தாரி மற்றும் அவரது மகன் பிரசாத் கோத்தாரி ஆகியோரிடம் பல்வேறு தேதிகளில் ஒரு கோடி ரூபாய்வரை பணம் கொடுத்தேன்.