சென்னை: அசோக் நகரில் கடந்த 5-ம் தேதி இரவு போக்குவரத்துப் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவரை மடக்கி, பிரெத் அனலைசர் மூலம் சோதனை செய்தபோது அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது.
அதனடிப்படையில் அந்த நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறையினர் அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அபராதத் தொகையாக 10 ஆயிரம் ரூபாயை செலுத்திய அந்த வாலிபர், தனது இருசக்கர வாகனத்தை எடுக்க அசோக் நகர் காவல் நிலையம் அருகே பணியில் இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜனிடம் வந்து தனது வாகனத்தின் சாவியைக் கேட்டுள்ளார்.
லஞ்சம் கேட்கும் போக்குவரத்து போலீஸின் வைரல் வீடியோ அப்போது ஆய்வாளர் நாகராஜன் சாவியைக் கொடுக்க வேண்டுமென்றால் தனக்கு தனியாக 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் உனது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்துவிடுவேன் எனவும் கூறி மிரட்டியுள்ளார். அந்த நபர் தனக்கு இன்னும் மாதச் சம்பளம் போடவில்லை, தன்னிடமும் பணமில்லை என எவ்வளவோ எடுத்துக்கூறியும், விடாபிடியாக லஞ்சம் கேட்டு போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் மிரட்டியுள்ளார்.
பல முறை அலையவிட்ட பின் இறுதியாக, அந்த நபரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு இருசக்கர வாகன சாவியை கொடுத்த ஆய்வாளர் நாகராஜன், சம்பளம் வாங்கியதும் மீதமுள்ள 4 ஆயிரம் ரூபாய் பணத்தையும் தன்னை சந்தித்துகொடுக்க வேண்டும் என மிரட்டி அனுப்பியுள்ளார். இந்நிலையில் அசோக் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் பாதிக்கப்பட்ட நபரை பணம் கேட்டு மிரட்டும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஆய்வாளர் நாகராஜன் நாள்தோறும் பல்வேறு வாகன ஓட்டிகளை லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் வாகன ஓட்டியிடம் 5ஆயிரம் லஞ்சம் கேட்டு மிரட்டிய போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:போலி வங்கி நடத்தி ரூ.2 கோடி மோசடி - போலீஸ் அதிரடி நடவடிக்கை