சென்னை : தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கட்சியினர் சார்பாக போஸ்டர், பேனர், பெயர் பலகை போன்றவற்றை வைக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை பறக்கும் படையினர் தீவிர கண்காணித்து வருகின்றனர். இந்தச்சூழ்நிலையில், சென்னையில் மட்டும் நேற்று (மார்ச்.7) காலை வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 24 வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.
அண்ணா நகரில் உள்ள சத்தியா நகர் மெயின் ரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பாஜக கொடி கட்டியதால், பாஜக பிரமுகர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.