தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 21, 2023, 7:53 PM IST

ETV Bharat / state

விழுப்புரம் ஆசிரம வழக்கில் 7 பேர் ஜாமீன்கோரி மனு தாக்கல்!

விழுப்புரம் ஆதரவற்றோர் ஆசிரமம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான ஆசிரம நிர்வாகிகள் 7 பேர், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் 7 பேர் ஜாமீன் மனு!
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் 7 பேர் ஜாமீன் மனு!

சென்னை:விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதரவற்றோர் ஆசிரமம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர்கள் காணாமல் போனதாகவும், அங்கு இருந்த பலருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. பின்னர் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ள ஆதரவற்றோர் ஆசிரம நிர்வாகிகளான ஜுபின் பேபி மற்றும் அவரது மனைவி மரியா உள்பட 7 பேர், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில், “மனநலம் பாதித்து சாலைகளில் திரிவோரை காவல் துறையினர் உதவி உடன் மீட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.

கடந்த 25 ஆண்டுகளாக இந்த இல்லத்தை நடத்தி வரும் எங்களுக்கு எதிராகப் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து உரிமங்களும், சான்றுகளும் பெற்று இல்லத்தை நடத்தி வருகிறோம். ஆசிரமத்தில் பலருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. காவல் துறையினரின் நிர்பந்தம் காரணமாக, அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். மாநில மனநல ஆணையத்திடம், இல்லத்துக்கு ஒப்புதல் கோரி அளித்த விண்ணப்பம் தற்போது நிலுவையில் உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி மனநல காப்பகத்தில் குணமடைந்தவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் முன்னாள் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மூத்த குடிமக்களுக்கு சட்டப்படி மாவட்டம்தோறும் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட வேண்டும்.

அப்படி முதியோர் இல்லங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், தனியார் இதுபோல் இல்லங்கள் அமைக்க அவசியம் இல்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. அதேநேரம் எங்களுக்கு ஜாமீன் வழங்கினால், இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளை கலைக்க மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மனு, அடுத்த ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த மார்ச் 14 அன்று, குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர் முன்னிலையில், விக்கிரவாண்டி தாசில்தார் ஆதி சக்தி சிவகுமரிமன்னன், ஆதரவற்றோர் ஆசிரமத்தில் இருந்த நிர்வாகி ஜூபின் பேபி தங்கி இருந்த அறை மற்றும் வார்டன் அறையைப் பூட்டி சீல் வைத்தார்.

இதையும் படிங்க:விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம அறைகளுக்கு சீல்!

ABOUT THE AUTHOR

...view details