தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 22, 2020, 6:09 PM IST

Updated : Mar 22, 2020, 11:59 PM IST

ETV Bharat / state

மருத்துவர்களுக்கு சக மருத்துவர் விஜய பாஸ்கர் எழுதிய பாராட்டு மடல்!

"சேவை செய்வதே எங்கள் பணி. அதனை மனமார செய்கிறோம். ஆனால் ஒரு சிரமம். கவச உடையணிந்துள்ளதால் தாகத்திற்கு தண்ணீர் குடிக்கத்தான் முடியவில்லை" என்று மருத்துவர் ஒருவர் சொன்னார். இதைக் கேட்டு உணர்ச்சிப் பெருக்கில் தன் கண்களில் கண்ணீர் நிறைந்ததாகவும், மகத்தான மருத்துவச் சேவையைக் கண்டு தான் மலைத்துப் போனதாகவும் அமைச்சர் விஜய பாஸ்கர் கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

Vijaya Baskar Poem about doctors service on corona
Vijaya Baskar Poem about doctors service on corona

உலகைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றால் 3 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதனைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் திணறி வந்தாலும், தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் கையாண்டு வருகின்றன.

கரோனாவைத் தடுக்க அரசு பல கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலும், அதனைச் செம்மையாகச் செயல்படுத்தி இரவுபகல் பாராமல் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும்தான்.

அல்லும்பகலும் நோயாளிகளைக் காக்கப் போராடிய சீன மருத்துவர்களின் புகைப்படங்களை சீன அரசு வெளியிட்டிருந்தது. மக்கள் அனைவரையும் அப்புகைப்படங்கள் நெகிழ்ச்சியடையச் செய்தன. தங்கள் உயிரையும் துச்சமென மதித்து செயற்கரிய செயலைச் செய்யும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் வந்து கரவோசை எழுப்புமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அதன்படி 5 மணிக்கு முன்னதாகவே மக்கள் அனைவரும் வெளியில் வந்து கை தட்டியும் ஒலி எழுப்பியும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அந்த வகையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி தான் கைப்பட எழுதிய கவிதை ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் மருத்துவர்களை அவர் கை கூப்பி நன்றி தெரிவிக்கும் புகைப்படத்தையும் இணைத்துப் பகிர்ந்துள்ளார்.

'அழித்தொழிப்போம் உயிர்கொல்லியை'என்று தலைப்பிட்டு அவர் எழுதியுள்ள கவிதை பின்வருமாறு:

கரோனா, உலகை நடுங்க வைக்கும் ஒற்றைச் சொல்!

உலகமே பதறி கிடக்கிறது!

கண்ணுக்குத் தெரியாத இந்த உயிர்கொல்லியின்

வேகத்திற்கு எதிராக துணிந்து நிற்பது மட்டுமல்ல,

ஒவ்வொருவரும் இடைவெளி விட்டு தூர நிற்பதே

சாலச் சிறந்தது!

இவ்வாறு எழுதி கவிதையைப் பாதியில் முடித்துக்கொண்ட அவர், அயராது உழைத்துக்கொண்டிருக்கும் மருத்துவர்களுடன் தான் பேசிய நெகிழ்ச்சியான நினைவலைகளை இடையில் பகிர்ந்துள்ளார்.

"வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் சென்றபோது, காற்று புகாத கவச உடையும் முகக்கவசம் அணிந்த மருத்துவர்களிடம் உங்களுக்கு ஏதாவது சிரமம் இருக்கிறதா என்று கனிவோடு கேட்டேன். அதற்கு மருத்துவர் ஒருவர், "சேவை செய்வதே எங்கள் பணி. அதனை மனமார செய்கிறோம்.

ஆனால் ஒரு சிரமம். கவச உடையணிந்துள்ளதால் தாகத்திற்கு தண்ணீர் குடிக்கத்தான் முடியவில்லை" என்று சொன்னார். இதைக் கேட்டு உணர்ச்சிப் பெருக்கில் என் கண்களில் கண்ணீர் நிறைந்தது. மகத்தான மருத்துவச் சேவையைக் கண்டு மலைத்துப் போனேன்" என்று மன நெகிழ்வோடு எழுதியுள்ளார்.

மருத்துவர் விஜய பாஸ்கர் எழுதிய பாராட்டு மடல்

இதையடுத்து தன் கவிதையைத் தொடர்ந்துள்ள அவர், "இதையெல்லாம் உணர்ந்து நாம் விழிப்போடு இருக்கவும் விழிப்போடு இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறைகூவல் விடுக்கின்றேன்...!

அசாதாரணமான வேகத்தில் பணியாற்றினால் மட்டுமே ஒவ்வொரு உயிருக்கும் பாதுகாப்பு என்பதால் உறக்கமின்றி கால நேரம் பாராது கணப்பொழுதும் ஓயாது சுற்றி சுழன்று மகத்தான சேவை செய்கிறது நம் தமிழ்நாடு அரசு!

மெச்சுகிறேன் நம் மருத்துவச் சேவையை!

நெஞ்சார நெகிழ்ந்து பாராட்டுகிறேன்!

நம் சேவைகளால் வெல்லட்டும் மனிதம்!

வீழட்டும் உயிர்கொல்லி! " என்று நெஞ்சுருகி தன் கவிதையை எழுதி முடித்துள்ளார் 'மருத்துவர்' விஜய பாஸ்கர்.

Last Updated : Mar 22, 2020, 11:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details