தமிழ்நாடு

tamil nadu

வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சி வழியே நடத்துக- வைகோ

By

Published : Jun 16, 2020, 11:02 AM IST

சென்னை: கல்வித் தொலைக்காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துமாறு  மத்திய, மாநில அரசுகளை மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

vaiko demand the state and center to ensure classes in education channels
vaiko demand the state and center to ensure classes in education channels

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தீநுண்மி பரவல் காரணமாக பொதுமுடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க முடியாத நிலை தொடர்கின்றது.

இந்நிலையில், தனியார் பள்ளிகளும், மழலையர், மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் பல இணைய வழியில் பாடங்களை நடத்திவருகின்றன. அதே போல கலைக் கல்லூரிகள், தொழிற் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள், இணைய வழி கற்பித்தல் முறையைப் பின்பற்றி வரத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 59 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. 1.3 கோடி மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

பொது முடக்கத்தால் இணைய வழிக் கல்வியை ஊக்குவிக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியது. அதற்கு ஏற்ப ஸ்வயம், பாடசாலா, தீக்ஷா உள்பட பல்வேறு கல்வி சார்ந்த வலைதளங்கள் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும், ஸ்கைப், கூகுள் கிளாஸ், ஜூம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகள் இணைய வகுப்புகளையும் நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இணைய வழி கற்பித்தலுக்கான உள்கட்டமைப்புகளைப் பெற்று இருக்கின்றதா என்பதையும் ஆய்வு நடத்த வேண்டும்.

இணைய வழி கற்பித்தலுக்கு மின் வசதி, இணையத்தளத் தொடர்பு, கணினி, அறிவுத் திறன் பேசி (Smart phone) போன்ற வசதிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்திருக்கின்றதா? என்பதையும் பார்க்க வேண்டும்.

தன்னார்வ தொண்டு நிறுவனம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்திய ஆய்வில், 56 விழுக்காடு பள்ளி மாணவர்களிடம் அறிவுத்திறன் பேசி இல்லாததால், எந்த முறையிலும் ‘ஆன்லைன்’ வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் இணையவழி கற்பித்தல் முறை என்பது சமூகத்தில் ஏழை எளிய, வசதியற்ற குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக் கனி என்பது தெரிகிறது. மேலும், இணைய வழி வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள், மாணவர்கள் காதொலிக் கருவிகளைப் பயன்படுத்துவதால், கண்கள், காதுகளின் திறனைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே சமச்சீரற்ற முறையில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் இணையவழி கற்பித்தல் முறையைக் கைவிட்டு, தொலைக் காட்சிகளின் வழியாக, தொலைக்கல்வி வகுப்புகள் நடத்தும் முறையை மத்திய - மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

தற்போது நெருக்கடியான காலகட்டத்தில் நாடு உள்ளபோது, செயற்கைகோள் மூலம் இயங்கும் கல்விக்கான தொலைக்காட்சிகளை இதற்குப் பயன்படுத்தும் வகையில் திறனை அதிகரிப்பதுடன், தனியார் தொலைக்காட்சிகளிலும் கற்பித்தலுக்கான நேரத்தை ஒதுக்கித் தர மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.

இணைய வழி கற்பித்தலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், சிக்கல்கள், சமச் சீரற்ற முறைகளைக் கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகள் மூலம் நேரலை வகுப்புகளை நடத்திடும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக களமிறங்கிய வைகோ, சசிதரூர்

ABOUT THE AUTHOR

...view details