சென்னை:தமிழ்நாட்டின் மக்கள், கலாசாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தின் ஒருங்கிணைப்பு முதலியவை இந்தப் பகுதியில் தனித்துவமான பல்லுயிரியலைப் பாதுகாப்பதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்தான அமைச்சர் புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். சர்வதேச பல்லுயிர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (மே 22) சிறப்புக்கண்காட்சி நடைபெற்றது.
இதனை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் எஸ்.வி. மெய்யநாதன் ஆகியோருடன் இணைந்து, சிறப்பு நினைவு அஞ்சல் உறை ஒன்றையும் ‘இந்தியா நேச்சுரல்' என்ற தலைப்பிலான புத்தகத்தையும் வெளியிட்டு, 2021ஆம் ஆண்டிற்கான இந்தியா பல்லுயிர் விருதுகளை புபேந்தர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “பல்லுயிர் பாதுகாப்பு குறித்து மக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும். இயற்கை வளங்களின் பாதுகாப்பு பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார். “உலகின் இயற்கையான வாழும் உள்கட்டமைப்புகளையும், சர்வதேச பொருளாதாரத்தின் இயக்கத்திற்கு அத்தியாவசியமான பொருட்களையும், சேவைகளையும் பல்லுயிர் அளிக்கிறது.
உலகப்பொருளாதாரத்தில் சுமார் 40 விழுக்காடு, பல்லுயிர் சார்ந்த பொருள்கள் மற்றும் செயல்முறைகளை அடிப்படையாக கொண்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் என்ற சவாலை நாம் எதிர் கொண்டால் மட்டுமே பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு முயற்சி முழு வெற்றி அடையும். உலக வெப்பமயமாதலை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என்றார்.