சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் வாக்காளர்களுக்கு பணம் வழங்கபடுகிறதா என்பதை கண்காணிக்க வருமானவரித் துறையினர் குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சென்னை பூக்கடையில் நாராயண முதலியார் தெருவில் உள்ள ஒரு ஹார்டுவேர் கடையில் வருமானத்திற்கு அதிகமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் வருமானவரித் துறை அலுவலர்கள் கடைக்குச் சென்று சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 3 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்தத் தொகை குறித்து வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அவ்விசாரணையில் அதே பகுதியில் ஏகாம்பரம் தெருவில் அமைந்துள்ள இரண்டு ஸ்டீல் கடைகளில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.