திமுக சார்பில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேறு யாரும் விருப்பம் தெரிவிக்காத நிலையில், நேர்காணலுக்கும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். இருப்பினும், அவர் அத்தொகுதியில் போட்டியிடுவாரா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. சட்டப்பேரவை தேர்தலில் அவருக்கு வாய்ப்பளிக்கும் பட்சத்தில் திமுகவில் குடும்ப ஆட்சி நிலவுவதாக குற்றச்சாட்டு எழு வாய்ப்புள்ளது. எனவே, அவரை உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. இந்த நிலையில், உதயநிதி வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் மேயராக அவர் நிற்க வைக்கப்படுவார் என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலினும் இதுபோல்தான், அரசியலில் தடம் பதித்தார்.
நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறாத நிலையில், புதிய அரசு அமைந்தவுடன் மக்களின் ஆதரவோடு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அது வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆட்சியைப் பிடிக்க திமுக நம்பிக்கையுடன் களம் காண்கிறது. இதற்கிடையே, தந்தை ஸ்டாலின் வந்த வழியை பின்பற்றி உதயநிதியை தலைவராக்க திமுகவுக்கு ஒன்றும் அச்சம் இருப்பதாக தெரியவில்லை. உதயநிதிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கருத்தில் எடுத்துக் கொண்டால் அது உண்மையாகவே தெரிகிறது.
வேட்பாளர் தேர்வின்போது, மற்றவர்களை போலவே உதயநிதியும் நேர்காணலில் கலந்து கொண்டார். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், நேர்காணலை தலைமை தாங்கி நடத்தியவர் உதயநிதியின் தந்தை ஸ்டாலின். இதன்மூலம், அது குடும்ப விவகாரமாகவே பார்க்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, வாய்ப்பளிக்கப்பட்டால், போட்டியிட தயாராக இருப்பதாக நம்பிக்கையுடன் தெரிவித்தார். தேர்தலுக்காக எவ்வுளவு செலவிட தயார் என ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, நீங்கள் எவ்வளவு கொடுக்க தயார்? என உதயநிதி பதில் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. கட்சியின் நட்சத்திர வேட்பாளராக இருக்கும் நீங்கள் மாநிலம் முழுவதும் பரப்புரை செய்ய வேண்டுமே, உங்கள் தொகுதியில் எப்படி பரப்புரையை நிர்வகிக்கப் போகிறீர்கள் எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நேர்மறை பதிலையே உதயநிதி அளித்துள்ளார்.
சேப்பாக்கம் தொகுதியில் பாஜக சார்பாக நடிகை குஷ்பு களமிறக்கப்படுவார் என்ற தகவல் வெளியானதால், அனைவரின் கவனமும் அத்தொகுதியின் மீது விழுந்தது. இருப்பினும், தற்போது அத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. உதயநிதி அத்தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது சந்தேகமாகவே உள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை எனினும், மேயர் தேர்தலில் அவரை களமிறக்க திமுக தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. திமுக மீதான குடும்ப ஆட்சி விமர்சனத்திற்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.