சென்னை: திருடுவதெல்லாம் இப்போ திறமை என்ற எண்ணத்தில் சிலர் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வயது வரம்பின்றி சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இரக்கமின்றி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவது கணிசமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலும் நகரங்களில் இப்படியான சம்பவங்கள் நடைபெறாது என நம்பிய காலகட்டங்கள் மாறி பெரு நகரங்களில் அதிகளவிலான திருட்டுச் சம்பவங்கள் எண்ண முடியாத அளவிற்கு நூதன முறையின் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனை தடுக்கும் விதமாக காவல்துறையினர் அவ்வப்போது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினாலும், எதையும் கண்டுகொள்ளாமல் அசட்டுத் தன்மையில் மீண்டும் மீண்டும் குற்றச் சம்பவங்கள் நீடிக்கின்றன. இப்படியான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோர், பொது மக்களின் உயிரை பணயம் கொண்டு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் வழிப்பறி, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் இது குறித்து காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அவ்வப்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அரங்கேறிய கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் அதிகரித்துள்ளது.
போரூரை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன். இரு தினங்களுக்கு முன்பு இவர் வேலை காரணமாக நந்தம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். அதே போல் எல் அண்ட் டி அருகே நடந்து சென்ற அனுப் என்பவரிடம் இருந்தும் அதே நபர்கள் செல்போன் பறித்து சென்றுள்ளனர்.